உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பே தனது பலத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி, வார்ம்-அப் போட்டியில் WI அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது. பேட்டிங்கில் பாரதி புல்மாலியும், பந்துவீச்சில் ஷ்ரேயங்கா பட்டீல், ராதா யாதவ் அசத்தினர்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான வார்ம்-அப் போட்டியில் இந்திய மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்துள்ளது. இந்த போட்டி வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நகரில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெஃபாலி வர்மா அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக மந்தனா 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வேகமான தொடக்கத்தை வழங்கினார். ஷெஃபாலி வர்மா 29 ரன்கள் சேர்த்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் குவித்தனர்.
24
பாரதி புல்மாலி அபார பேட்டிங்
மத்திய ஓவர்களில் சில விக்கெட்டுகளை இந்தியா விரைவாக இழந்தாலும், பாரதி புல்மாலி அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றினார். அவர் 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் இடம்பெற்றன. இதன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது.
34
180 ரன்கள் இலக்கு
180 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்தில் சில நல்ல ஷாட்டுகளை ஆடியபோதிலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சால் தடுமாறியது. இந்திய அணியின் ஷ்ரேயங்கா பட்டீல் மிகச் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராதா யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசையை சீர்குலைத்தார்.
இதன் விளைவாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கு முன்பான தனது தயாரிப்பை வலுவாக வெளிப்படுத்தியது.
இந்த வெற்றி இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரு துறைகளிலும் நல்ல சமநிலையை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாரதி புல்மாலியின் அரைசதமும், ஷ்ரேயங்கா பட்டீல் – ராதா யாதவ் ஆகியோரின் சுழற்பந்து வீச்சும் ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி தனது அடுத்த வார்ம்-அப் போட்டியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதன்பின், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்க உள்ளது.