
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 30ஆவது லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில், ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்து 287 ரன்கள் எடுத்து புதிய சரித்திரம் படைத்தது. இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277/3 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது.
இந்த சாதனையை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். ஹெட், 41 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உள்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதே போன்று ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்களும், எய்டன் மார்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பாப் டூப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக தொடங்கினர். முதல் 6 ஓவர்களில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், இந்த ஜோடி 80 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. விராட் கோலி 20 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலியைத் தொடர்ந்து வந்த வில் ஜாக்ஸ் 7 ரன்னிலும், ரஜத் படிதார் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த பாப் டூப்ளெசிஸ் 28 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சௌரவ் சௌகான் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார்.
ஆர்சிபி முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தினேஷ் கார்த்தி களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஹைதராபாத்தின் ஒவ்வொரு பவுலரையும் விட்டு வைக்காமல் வாங்கிய அடியை திருப்பி கொடுத்தார். மேலும், புவனேஷ்வர் குமார் ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.
கடைசியில் 12 பந்துகளில் 58 ரன்கள் தேவை இருந்தது. இதில், 18.5ஆவது ஓவரில் நடராஜன் பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார். இந்த நிலையில், இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர் ஒன்று அதிக தூரம் வரை சென்று சாதனையை உருவாக்கியுள்ளது. 106 மீ அதிகபட்சமாக இருந்த நிலையில், தினேஷ் கார்த்திக் 108 மீ நீண்ட தூரம் சிக்ஸர் அடித்து கிளாசெனின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆர்சிபி 200 ரன்கள் கூட தாண்டாது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் தனது அதிரடியால் விளையாடி 250 ரன்களுக்கு மேல் கொண்டு வந்துள்ளார். எனினும், இந்தப் போட்டியில் ஆர்சிபி ஜெயித்திருந்தால் வரலாற்று சாதனையாக இருந்திருக்கும்.
இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் 38*, 28*, 20, 4, 53* மற்றும் 83 ரன்கள் என்று மொத்தமாக 226 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் பேட்டிங் செய்யவில்லை. அதுமட்டுமின்றி இந்தியாவில் டி20 போட்டியில் மட்டும் 6000 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கை பார்த்து வியந்த ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து நக்கலாக பேசினார். இதனை வேதவாக்காக எடுத்துக் கொண்ட தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி தேர்வுக்குழுவை தன் மீது கவனம் செலுத்த வைத்துள்ளார்.
இறுதியாக அனுஜ் ராவத் 25 ரன்கள் எடுத்து கொடுக்க ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மாயங்க் மார்கண்டே 2 விக்கெட்டும், நடராஜன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஆர்சிபி விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.