இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த தொழில் நேர்த்தியுடனும், கண்ணியத்துடனும் கையாளப்பட்டன. அடையாளம் காண்பதற்கான அனைத்து நெறிமுறைகளையும், தொழில்நுட்பத் தேவைகளையும் பூர்த்தி செய்தே உடல்கள் ஒப்படைக்கப்பட்டன" என்று விளக்கமளித்துள்ளது. இருப்பினும், பிரிட்டன் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கவலைகள் குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்குப் பிறகு, குஜராத் மாநில தடயவியல் அறிவியல் இயக்குநரகம் மற்றும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிபுணர்கள், உடல்களை அடையாளம் காணவும், டிஎன்ஏ மாதிரிகளைப் பொருத்திப் பார்க்கவும் கடுமையாக உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த அடையாளக் குழப்பங்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.