மஹாலக்ஷ்மி தாயாருடன் சனி அமர்ந்து அருள் பாலிக்கும் அதிசய தலம்.! இங்கு வழிபட்டால் சனி தோஷம் நீங்கும், சனியின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும்.!

Published : Apr 21, 2026, 01:45 PM IST

Thirukollikadu Pongu Saneeswara Temple : சனி பகவான் சாந்தமான தவ கோலத்தில் காட்சி தரும் திருத்தலம் பற்றியும், இங்கு வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
19
Thirukollikadu Pongu Saneeswara Temple

நவகிரகங்களில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப இவர் பலன்களை வழங்குகிறார். ஜோதிடத்தில் சனி பகவான் மெதுவாக நகரக்கூடிய கிரகம் ஆவார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் தனது ராசியை மாற்றுகிறார். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக விளங்கும் சனி பகவான், துலாம் ராசியில் உச்சமும் மேஷ ராசியில் நீச்சமும் அடைகிறார். அவர் ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்வதால் ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற காலங்கள் ஏற்படுகின்றன. இவை மனித வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

29
சனி பகவான் கொடுக்கும் பலன்கள்

சனி பகவான் ஒருவரை தண்டிக்க வேண்டும் என்பதற்காக கஷ்டங்களை கொடுப்பதில்லை. மாறாக ஒருவரின் அகந்தையை அழித்து, பொறுமையையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கவே சோதனைகளை தருகிறார். சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் சுபமாக இருந்தால் ஈடு இணையற்ற பலன்களைத் தருவார். கடின உழைப்புக்கான பலன்களும், எதனையும் தாங்கும் மன வலிமையும் அவர்களுக்கு கிடைக்கும். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும். இரும்பு, எண்ணெய், நிலக்கரி மற்றும் கடின உழைப்பு சார்ந்த தொழில்களில் மிகப்பெரும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிய வைத்து ஆன்மீக முதிர்ச்சியை அளிப்பார்.

39
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்

தமிழகத்தில் பல இடங்களில் சனி பகவான் கோவில் கொண்டுள்ளார். இருப்பினும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற பரிகார தலங்களில் ஒன்றாகும். இங்கு சனீஸ்வர பகவான் ‘பொங்கு சனி’ என்கிற பெயருடன் அருள் பாலிக்கிறார். இங்கு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு செல்வங்களையும், நன்மைகளையும் வாரி வழங்கும் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தில் மூலவராக இறைவன் அக்னீஸ்வரனும், இறைவியாக மிருதுபாதாம்பிகை (மெல்லடியம்மை) ஆகியோர் அருள் பாலிகின்றனர். இந்த தலம் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரையின் 115 வது தலமாகும்.

49
ஏர் கலப்பையுடன் காட்சி தரும் சனீஸ்வரர்

பொங்கு சனி என்று அழைக்கப்படுவதற்கு காரணம் இங்கு உள்ள சனீஸ்வர பகவான் சாந்தமாகவும், ஆசீர்வாதம் வழங்கும் நிலையிலும் காணப்படுகிறார். சனீஸ்வர பகவான் தான் அளிக்கும் தண்டனை காரணமாக தன்னை மக்கள் வெறுக்கிறார்கள் என்று மனம் வருந்தினார். இந்த தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அக்னீஸ்வரரை நோக்கி தவம் செய்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் சனீஸ்வர பகவானின் கையில் இருந்த தண்டத்தை நீக்கிவிட்டு, ஏர் கலப்பையை அளித்து அவருக்கு ஈஸ்வரன் என்ற பட்டத்தை வழங்கினார். இங்குள்ள சனீஸ்வர பகவான் கையில் ஏர் கலப்பையுடன் அருள் பாலிக்கிறார். ஏர் கலப்பை உழைப்பை குறிக்கிறது. சரியான வழியில் உழைப்பவர்களுக்கு பொங்கு சனீஸ்வரர் செல்வத்தையும் வாழ்வின் இழந்த சிறப்புகளையும் பொங்கச் செய்கிறார்.

59
நளனுக்கு அருளிய பொங்கு சனீஸ்வரர்

புராணக் கதைகளின் படி சனி பிடித்ததால் நாடு, மனைவி, மக்கள் மற்றும் செல்வங்கள் அனைத்தையும் இழந்த நளன் சக்கரவர்த்தி திருநள்ளாறில் தோஷம் நீங்க பெற்றார். இருப்பினும் இழந்த செல்வங்களை மீட்பதற்காக அவர் கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரரை வழிபட்டார். அப்போது சனி பகவான் தனது கடுமையான பார்வையை குறைத்து, மனமிறங்கி நளனுக்கு நன்மைகளை வாரி வழங்கினார். அதேபோல் சந்திர பகவானுக்கும் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவான் அருள் புரிந்ததால் இந்த திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்ற திருத்தலங்களில் சங்கட சனியாக இருப்பவர் இங்கு குபேர திசையை பார்த்து அமர்ந்திருப்பது இந்த திருத்தலத்தின் கூடுதல் சிறப்பாகும்.

69
தீயின் கடவுளுக்கு அருள்பாலித்த ஈசன்

தீயின் கடவுளான அக்னி தேவன் தன்னை சனியின் பிடியில் இருந்து காத்துக் கொள்ள இத்தலத்தில் இருக்கும் ஈசனை நோக்கி வழிபட்டார். அக்னி தேவனின் வழிபாட்டால் மகிழ்ந்த சிவன், அவரை சனியின் பிடியிலிருந்து விடுவித்து, இத்தலத்தில் நிரந்தரமாக தங்கினார். அக்னி தேவன் வழிபட்டதால் மூலவர் அக்னீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்தின் மூலவரான அக்னீஸ்வரனை வழிபட்டால் அக்னியால் ஏற்படும் விபத்துக்கள், அச்சங்கள் மற்றும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு அருள்புரியும் அக்னீஸ்வரர், கால பைரவர், சனீஸ்வரர் ஆகியோரை வழிபடுபவர்களுக்கு எம பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

79
திருக்கொள்ளிக்காடு ஆலயத்தின் தனிச்சிறப்புகள்

திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் பகவான் ஆலயம் சில தனி சிறப்புகளுடன் காணப்படுகிறது. சனீஸ்வரர் தனது வலது மேற் கரத்தில் ஏர் கலப்பையை தாங்கியவராக அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாளிக்கிறார். சனீஸ்வர சன்னதிக்கு அருகில் மகாலட்சுமி தாயார் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தாயார் சனீஸ்வரருக்கு அருகில் அமர்ந்து அருள் பாலிப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. பொங்கு சனீஸ்வரரின் சன்னதிக்கு நேர் எதிரே அவரது குருவாக கருதப்படும் யோக பைரவர் சன்னதி அமர்ந்துள்ளது. குருவின் நேரடி பார்வையில் சனீஸ்வரர் அருள்பாலிப்பது தோஷ நிவர்த்தியை உறுதிப்படுத்துவதாக ஐதீகம்.

89
திருக்கொள்ளிக்காடு தல விருட்சம்

இந்தக் கோயிலின் தல விருட்சமாக வன்னி மரம் விளங்கி வருகிறது. வன்னி மரமானது இந்து மதத்தில் புனிதமானதாக கருதப்படுகிறது. சனீஸ்வரனின் அதிபதியாகிய சிவபெருமானுக்கும் இந்த மரத்திற்கும் தொடர்பு உள்ளது. இந்த கோயிலில் உள்ள வன்னி மரத்தின் அடியில் சனி பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுவது வாழ்வில் நல்ல திருப்பங்களை தரும் என்று நம்பப்படுகிறது. ஏழரை சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் இங்கு வன்னி மரத்தடியில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

99
திருநள்ளாறு vs திருக்கெள்ளிக்காடு வேறுபாடு

சனி திசை நடப்பவர்கள், வாழ்க்கையில் தொடர் தோல்விகள், எதிர்பாராத கஷ்டங்கள், பொருளாதார பின்னடைவுகளை சந்திப்பவர்கள் பொங்கு சனீஸ்வரரை வணங்கினால் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து, மீண்டும் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் பொங்கி பெருகும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சியின் பொழுது இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இங்கு ஊமத்தம் பூ சமர்ப்பித்து வழிபடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது. திருநள்ளாறு சனி கிரகத்தின் தோஷத்தை குறைத்து சாந்தப்படுத்துவதற்காக வணங்கப்படுகிறது. திருக்கொள்ளிக்காடு தோஷங்களை நீக்குவதுடன் இழந்த செல்வங்கள், தொழில் மற்றும் குடும்பத்தில் உள்ள நன்மைகள் மீண்டும் பொங்கி பெருக வழிபட வேண்டிய திருத்தலமாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories