
புரட்டாசி மாதம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது பெருமாள் வழிபாடுதான். இந்த மாதத்தில் பல பக்தர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து, வீட்டில் விளக்கேற்றி பெருமாளை வழிபடுகின்றனர். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த வழிபாட்டின்போது பெருமாளின் திருநாமங்களைச் சொல்வது பக்தர்களிடையே முக்கியமான வழக்கமாக உள்ளது
ஓம் நமோ நாராயணாய - பெருமாள் வழிபாட்டில் மிகவும் பிரபலமான மந்திரங்களில் ஒன்று “ஓம் நமோ நாராயணாய”. இது அஷ்டாக்ஷர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. தினமும் காலையில் குளித்து முடித்த பிறகு பூஜையறையில் விளக்கேற்றி, மனதை ஒருமுகப்படுத்தி இந்த மந்திரத்தைச் சொல்லலாம்.
திருமலை திருப்பதி முதல் பல்வேறு பெருமாள் திருத்தலங்கள் வரை, பக்தர்களின் இதயத்திலிருந்து இயல்பாகப் பொங்கி வரும் திருநாமம் “கோவிந்தா..கோவிந்தா” . பெருமாளை நினைத்தாலே மனதில் நிம்மதியும், பக்தி உணர்வும் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர். எனவே, வீட்டிலும் பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, மனதை ஒருமுகப்படுத்தி “கோவிந்தா..கோவிந்தா” என்று பக்தியுடன் உச்சரித்து வழிபடலாம்.
“ஸ்ரீனிவாசா” என்று தொடர்ந்து நாமஸ்மரணம் செய்வது மனதை ஒருமுகப்படுத்தி, கவலை மற்றும் குழப்பமான எண்ணங்களில் இருந்து மனதை விலக்க உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. “ஸ்ரீ” என்பது செல்வம், வளம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதால், குடும்பத்தில் பொருளாதார வளமும் மகிழ்ச்சியும் பெருக வேண்டும் எனப் பலர் “ஸ்ரீனிவாசா” நாமத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்கின்றனர்.
மேலும், வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் சிரமங்கள் விலகி, நல்ல பாதை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடனும் இந்த நாமத்தை பக்தியுடன் உச்சரிக்கலாம்.
"வெங்கடேசா..வெங்கடேச.." என்று பக்தியுடன் நாமஸ்மரணம் செய்வது மன அமைதி, நம்பிக்கை மற்றும் ஒருமுகத்தன்மையை வளர்க்க உதவும் என்ற ஆன்மிக நம்பிக்கை உள்ளது. குடும்ப நலம், தடைகள் நீங்குதல், செல்வ வளம் பெருகுதல் போன்றவற்றுக்காகவும் பக்தர்கள் இந்த நாமத்தைச் சொல்லி பெருமாளை வழிபடுகின்றனர்.
வெங்கடாசலபதி: “வெங்கடாசலபதி” என்று பக்தியுடன் நாமஸ்மரணம் செய்வது இறை பக்தியை வளர்க்க உதவும். குடும்ப நலம், வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்குதல், வளம் பெருகுதல் போன்ற வேண்டுதல்களுடன் பக்தர்கள் இந்த நாமத்தைச் சொல்லி பெருமாளை வழிபடுகின்றனர்.
நாராயணா என்று பக்தியுடன் நாமஸ்மரணம் செய்வது மன அமைதி, தெளிவு மற்றும் இறைநம்பிக்கையை வளர்க்க உதவும் குடும்ப நலம், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுதல், கவலைகள் குறைதல் போன்ற வேண்டுதல்களுடன் பக்தர்கள் இந்த நாமத்தைச் சொல்லி வழிபடுகின்றனர்.
இதுமட்டுமின்றி, புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் “மாதவா, கேசவா, மாதுசூதனா, தாமோதரா, பத்மநாபா, அச்சுதா, அனந்தா, ஹரியே நமஹ, ஸ்ரீமன் நாராயணா” போன்ற பெருமாளின் திருநாமங்களையும் பக்தியுடன் உச்சரிக்கின்றனர். ஒவ்வொரு நாமத்தையும் மனமுருகி சொல்லி, குடும்ப நலன், மன அமைதி, வளமான வாழ்க்கை மற்றும் இறையருள் கிடைக்க வேண்டும் எனப் பக்தர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கமாக உள்ளது
குறிப்பு: புரட்டாசி மாதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நாமங்களைச் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 11, 27, 54 அல்லது 108 முறை என குடும்ப வழக்கம் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைக்கு ஏற்ப நாமங்களைச் சொல்லி வழிபடலாம். பக்தியுடனும், மன ஒருமைப்பாட்டுடனும் இறைவனை நினைத்து வழிபடுவதே முக்கியம்.