
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி பண்டிகை தொடங்கும் அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 3ஆம் தேதி வியாழன் கிழமை அன்று தொடங்கி 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று முடிவடைகிறது. இதற்கிடையில் செப்டம்பர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சரஸ்வதி பூஜை வருகிறது. நவராத்திரி இறுதி நாளில் தான் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் இந்நாளை தசராவாக கொண்டாடுவார்கள்.
நவராத்திரி அன்று கொலு வைப்பவர்கள், வைக்காதவர்கள் என்று அல்லாமல் எல்லா பெண்களும் நவராத்திரி நாளில் விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சில பெண்கள் 9 நாட்களிலும் விரதம் இருப்பார்கள். ஆனால், சில பெண்களோ செவ்வாய், வெள்ளி, சஷ்டி போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே விரதத்தை கடைப்பிடிப்பார்கள். விரதம் இருப்பவர்கள் பூஜை செய்து அம்பாளை வழிபடுவார்கள்.
நவராத்திரி நாளில் விரதம் இருக்கும் பெண்கள் விரத நாட்களில் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்.. எதை சாப்பிடக்கூடாது என்பது சிலருக்கு தெரிவதில்லை. ஆனால், விரத நாட்களில் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்ப்பது மிகவும் அவசியம். எனவே, நவராத்திரி விரத நாளில் விரதம் இருக்கும் பெண்கள் என்ன உணவுகளை சாப்பிடலாம். எதை தவிர்க்க வேண்டும் என்பதை குறித்து இங்கு விரிவாக நாம் பார்க்கலாம்.
நவராத்திரி விரதம் இருக்கும் முறை :
நவராத்திரி நாட்களில் 9 நாட்களும் விரதம் இருப்பவர்களும் உண்டு. சொல்ல போனால் அவரவருக்குப் போல் விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.
அதாவது அந்த ஒன்பது நாட்களும் ஒரு சில பெண்கள் காலை முதல் மாலை வரை விரதம் இருந்து பூஜை செய்து அம்பாளை வழிபட்டு, பிறகு இரவு நேரத்தில் தான் சாப்பிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்பது நாட்களுமே ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதத்தை கடைபிடிப்பார்கள்.
இன்னும் சில பெண்களோ நவராத்தி நாளில் வெள்ளி, செவ்வாய், சஷ்டி போன்ற விசேஷ நாட்களில் மட்டும் நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். பிறகு மாலை வேளையில் பால் குடித்துவிட்டு தங்களது விரதத்தை முடிப்பார்கள். இதிலும் சிலரோ தண்ணீர் மட்டுமே அருந்தி நாள் முழுவதும் விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.
நவராத்திரி விரத நாளில் அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவுகள் நெய்வேத்தியமாக படைக்கப்படும். அவற்றை மட்டுமே ஒரு சில பெண்கள் தங்களுடைய விரத நாட்களில் உணவாக எடுத்துக் கொள்வார்கள். மாலை வேளையில் அம்பாளுக்கு சுண்டல் படைக்கப்படும். அவற்றை தங்களுடைய இரவு உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.
இதையும் படிங்க: நவராத்திரி 2024 : தேதி.. சிறப்புகள் மற்றும் பல..
நவராத்திரி விரதம் இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?
நவராத்திரி விரதம் இருப்பவர்கள் பழ வகைகளில் ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். அதுபோல பால் அல்லது மோர் குடிக்கலாம். திட உணவாக கஞ்சி எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, அவல், வெல்லம், பயிர் வகைகள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவற்றை ஒரு நேரம் மட்டுமே சாப்பிட வேண்டும். முக்கியமாக, நீங்கள் தீவிரமாக விரதத்தை கடை பிடித்தால் சாப்பிடும் உணவில் உப்பு சேர்க்க கூடாது.
நவராத்திரி விரத நாளில் சாப்பிடக்கூடாதவை :
பொதுவாகவே விரதம் இருப்பவர்கள் அதிக மாசலா பூண்டு, வெங்காயம், முருங்கை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுவும் குறிப்பாக நவராத்திரி விரதம் இருப்பவர்கள் அரிசி கோதுமை ஆகியவற்றையும் முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் வெளியில் கடைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகளையும், எண்ணெயில் பொறித்த உணவுகளையும், அசைவ உணவுகளையும், மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், நீங்கள் விரதம் இருந்து பிறகு இந்த மாதிரியான பொருட்களை சாப்பிட்டால் உங்களுக்கு செரிமான பிரச்சனை ஏற்படும்.
முக்கிய குறிப்பு :
நவராத்திரி நாட்களில் தொடர்ந்து ஒன்பது நாட்கள் விரதம் இருப்பவர்கள் தங்களது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். அவை..
1. விரதம் இருப்பவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர நீங்கள் மோர், பழச்சாறுகளையும் குடிக்கலாம்.
2. நீங்கள் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.
3. பாதாம், முந்திரி, உலர் திராட்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மேலும் வேக வைத்த சுண்டல் சாப்பிடலாம்.
4. விரதம் இருப்பது சோர்வை உண்டாக்கும் என்பதால், நீங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். விரத நாட்களில் நன்றாக தூங்குவது மிகவும் அவசியம்.
5. விரதம் இருப்பவர்கள் ஒருபோதும் தேவையில்லாத சண்டைகள் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். இதனால் உங்கள் உடலில் இருக்கும் ஆற்றல்களை இழக்க நேரிடும்.
இதையும் படிங்க: நவராத்திரி 2024 : எந்த நிறங்களில் 9 நாட்களும் ஆடை அணிந்தால் என்ன பயன் கிடைக்கும்?