Snakes: உலகில் அனைத்து விலங்குகளும் குட்டியுடன் இருக்க, பாம்புகள் மட்டும் எப்போதும் ஏன் தனித்து இயங்குகிறது? என உங்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கலாம். இதற்கான காரணம் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
மனிதர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக வாழ்ந்து வருவது போல் விலங்குகளும் தங்கள் குட்டிகளுடன் வாழ்ந்து வருகின்றன. விலங்குலகில் தாய்மை என்பது எப்போதும் ஆச்சரியமானது. பூனை தன் குட்டிகளை வாயில் கவ்வி இடமாற்றுவதையும், நாய் தன் குட்டிகளுக்குப் பால் கொடுப்பதையும் நாம் பார்த்திருப்போம். இதேபோல் சிங்கம், புலி, யானை போன்ற காட்டு விலங்குகளும் தங்களின் குட்டிகள் மேல் அதீத பாசம் காட்டும். ஆனால் பாம்புகளின் உலகம் மிகவும் விசித்திரமானது; வித்தியாசமானது.
24
பாம்புகள் குட்டியுடன் ஏன் செல்வதில்லை?
நீங்கள் பாம்புகள் தங்கள் குட்டியுடன் செல்வதை ஒருபோதும் பாத்திருக்க முடியாது. ஏனெனில் முட்டையிட்ட உடனோ அல்லது குட்டி போட்ட உடனோ அதை அப்படியே விட்டுவிட்டுச் செல்லும் விசித்திரமான குணம் பாம்புகளுக்கு உண்டு. மற்ற உயிரினங்களை போல் பாம்புகளும் ஏன் குட்டிகளுடன் வாழ்வதில்லை பாம்புகளுக்குப் பாசமே இருக்காதா? என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இதன் பின்னணியில் இருக்கும் இயற்கையின் விசித்திரமான அறிவியல் காரணங்களை பார்ப்போம்.
இயற்கையின் நியதி இதுதான்
பாலூட்டி விலங்குகளின் குட்டிகள் பிறக்கும்போது மிகவும் பலவீனமாக இருக்கும். தாயின் அரவணைப்பும் பாதுகாப்பும் இல்லாமல் அவற்றால் வாழ முடியாது. ஆனால், பாம்புகள் ஊர்வன (Reptiles) வகையைச் சேர்ந்தவை. இவற்றின் குட்டிகள் பிறக்கும்போதே அல்லது முட்டையிலிருந்து வெளிவரும்போதே முற்றிலும் சுயசார்பு உடையவையாக இருக்கின்றன. அவற்றுக்குத் தேவையான வேட்டையாடும் திறன், தற்காப்பு உணர்வு மற்றும் விஷத்தன்மை ஆகியவை பிறப்பிலேயே இயற்கையாக அமைந்துவிடுகின்றன. எனவே, அவற்றுக்குத் தாயின் பராமரிப்புத் தேவைப்படுவதில்லை.
34
சொந்த குட்டிகளையே பாம்புகள் சாப்பிடும்
பாம்புகளுக்குப் பாலூட்டிகளைப் போன்ற நீண்ட காலத் தாய்மை பாச உணர்வு (Maternal instinct) மூளையில் இருப்பதில்லை. மேலும், பாம்புகள் பொதுவாகப் பசியோடு இருக்கும்போது எதிரில் நகரும் எதையும் உணவாகப் பார்க்கும் குணம் கொண்டவை. முட்டை பொரிந்து வெளிவரும் குட்டிகள் நகர்வதைப் பார்த்து, பசியில் இருக்கும் தாய் பாம்பே தன் சொந்தக் குட்டிகளைச் சாப்பிட்டுவிடக் கூடிய ஆபத்து இயற்கையில் உண்டு. இதைத் தவிர்க்கவே, குட்டிகள் வெளிவரும் தருணத்தில் தாய் பாம்பு அங்கிருந்து விலகிச் சென்றுவிடுகிறது.
மரபணுவிலேயே விதைக்கப்பட்டுள்ளது
தெளிவாக சொல்வது என்றால் பாம்புகளின் உலகில் உயிர் பிழைத்திருப்பது, சாப்பிடுவது என இரண்டும் தான் இருக்கிறது. அதன் மரபணுவிலேயே இயற்கை அப்படி தான் பிக் செய்து வைத்திருக்கிறது. பாம்பு ஒரு குட்டி போட்டு, பிற்காலத்தில் அந்த குட்டியே எதிரில் வந்தாலும், தாய்ப் பாம்பு பசியோடு இருக்கும்போது அதனை ஒரு உணவாகத்தான் பார்க்கும். அதற்கு தன் குட்டி என்றெல்லாம் தெரியாது. இது தான் இயற்கையின் நியதி.
இதில் சில ஆச்சரியமான விதிவிலக்குகளும் உண்டு. உலகிலேயே கூடுகட்டி முட்டையிடும் ஒரே பாம்பு ராஜநாகம் (King Cobra) ஆகும். முட்டைகளைப் பிற எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க அது கூடு கட்டி, முட்டை பொரியும் வரை கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் பட்டினியாக இருந்து காவல் காக்கும். ஆனால், குட்டிகள் முட்டையை உடைத்து வெளிவரும் தருணத்தில், பசியில் தன் குட்டிகளைத் தானே சாப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்து கிளம்பிவிடும். சில மலைப்பாம்புகளும் முட்டைகளைத் தன் உடலால் சுற்றி வெப்பமளித்து அடைகாக்கும்.
ஒட்டுமொத்தத்தில் பாம்புகள் தன் குட்டிகளைப் பிரிந்து செல்வது பாசமின்மையால் அல்ல; இயற்கையின் தப்பிப்பிழைக்கும் கோட்பாட்டின்படி குட்டிகள் தனித்து வாழப் பழக வேண்டும் என்பதற்காகவே ஆகும்.