
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் விஷால், தற்போது தனது அடுத்த கட்ட முயற்சியாக இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். அவர் இயக்கி, இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மகுடம்’. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படம், அந்த நிறுவனத்தின் மூலம் அறிமுகமாகும் 45-வது புதிய இயக்குநரின் படமாகவும் குறிப்பிடப்படுகிறது. விஷால் இதுவரை ஏராளமான அதிரடி மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், ஒரு படத்தை இயக்குவதுடன் அதில் இரண்டு வேடங்களிலும் நடிப்பது அவரது திரைப்பயணத்தில் வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதனால் ‘மகுடம்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மகுடம்’ படத்தை ஆரம்பத்தில் ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, இயக்குநர் பொறுப்பில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படத்தை இயக்கும் பணியை விஷாலே ஏற்றுக்கொண்டார்.
மகுடம் படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில், அப்படத்தின் இயக்குநர் விஷால் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், “நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஆம், எதற்காகவும் பின்வாங்க மாட்டேன். ஒருபோதும் இல்லை. நான் விஷால்... கடவுளின் குழந்தை. சவால்கள் அதிகமாக அதிகமாக, அவற்றை எதிர்கொண்டு நான் இன்னும் உயர்ந்து கொண்டே இருப்பேன். ஏனென்றால், தயக்கமோ வெட்கமோ இல்லாமல் கண்ணாடியைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு நேர்மையாகவும், முழு அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும், மன உறுதியுடனும் என் பணியை செய்து வருகிறேன்.
நடிகராக எனது கடமையை ரசிகர்களுக்காக முழுமையாக நிறைவேற்ற, எப்போதும் கூடுதலாக ஒரு படி முன்னேறி உழைப்பேன். உலகம் முழுவதும் இருக்கும் அத்தனை அன்பான ரசிகர்களையும் நான் கடவுளுக்கு நிகராகவே பார்க்கிறேன். ஏனென்றால், இன்று நான் திரைத்துறையிலும் சமூகத்திலும் இந்த இடத்தில் இருப்பதற்கு அவர்கள்தான் முக்கிய காரணம். 35 ஆண்டுகளாக நான் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக முதல்முறையாக இயக்குநராக உங்கள் முன் வந்திருக்கிறேன். என் பணியை நான் முடித்துவிட்டேன். கடந்த 14 மாதங்களாக நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உழைத்து உருவாக்கிய இந்தப் படைப்பை உங்கள் அனைவருக்கும் காட்டுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ‘மகுடம்’ படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த பின்னர் தனது கருத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். ‘மகுடம்’ திரைப்படம் மிகப்பெரிய லட்சியத்துடன் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஆக்ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கிறது. படத்தை இயக்கியதுடன் விஷாலே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அது ரசிகர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் இருக்கிறது.
படத்தில் இடம்பெறும் மூன்று முக்கியமான அதிரடி காட்சிகளும் பெரிய திரையில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும். லிங்கா என்ற கதாபாத்திரத்தில் விஷால் மிரட்டியுள்ளார். ஒரு கேங்கின் தலைவனாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக உள்ளது. அவருக்கு துஷாரா, சஞ்சலி, ஜான் விஜய், ஜே.பி உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் வேகத்தை தொடர்ந்து தக்கவைக்க உதவுகின்றன. அதிரடி காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான தருணங்களையும் சரியான அளவில் இணைத்து, ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக ‘மகுடம்’ உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.