
நாகர்கோவில் பகுதியில் சட்டவிரோத செயல்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு தாதா மூர்த்தி (சரத்குமார்). எதற்கும் அஞ்சாத, எதிர்ப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் சுபாவம் கொண்டவர். ஒரு யூடியூப்பர் இவரைப் பற்றி அம்பலப்படுத்த முயன்று அடிவாங்கிச் சாலையில் வீசப்படுகிறார். இப்படிப்பட்ட கரடுமுரடான மனிதரின் மகளை (தேவிகா சதீஷ்), அதே கல்லூரியில் பயிலும் அருள் (இந்திரஜித் ஜெகஜித்) காதலிக்கிறான். இந்த விஷயம் மூர்த்தியின் கவனத்திற்கு வீடியோ ஆதாரத்துடன் செல்ல, ஆவேசமடைகிறார். அருளைக் கடத்திச் சென்று நடுக்கடலில் ஒரு மீன்பிடிப் படகின் ஐஸ் அறையில் அடைத்து வைக்கிறார். அங்கு நடக்கும் மோதல்களும், எதிர்பாராத விதமாக மூர்த்தியின் கால் படகின் இயந்திரத்தில் சிக்கிக்கொள்வதும், அதன்பின் நடக்கும் உயிர் போராட்டமுமே இந்தப் படத்தின் மீதிக் கதை.
சரத்குமார், நீண்ட முடி, அடர்ந்த தாடி என ஒரு மிரட்டலான தோற்றத்தில் 'மூர்த்தி'யாக வாழ்ந்திருக்கிறார். அதிக வசனங்கள் பேசாமல், தனது உடல்மொழியாலேயே முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. இந்திரஜித் ஜெகஜித், நாயகனாக நடித்திருக்கும் இவர், புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். சரத்குமாருக்கு இணையான மோதல் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
தேவிகா சதீஷ், சரத்குமார் மகளாக வந்து மனதை ஈர்க்கிறார். வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ் உள்ளிட்ட துணை நடிகர்கள் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.
லக்கி (நாய்) படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரமாகவே வலம் வருகிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில் எஜமான் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தி நெகிழ வைக்கிறது. படத்தின் பெரும்பகுதி ஒரே படகிற்குள் நடந்தாலும், கேமரா கோணங்கள் நம்மை சலிப்படையச் செய்யவில்லை. கடலின் அசைவையும், அந்தப் படகின் உட்புறப் பதற்றத்தையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளனர். ஜாசி கிப்ட்டின் இசையில் பாடல்கள் இனிமை. குறிப்பாக 'அழகே உயிர் நீயடி' பாடல் ரசிக்க வைக்கிறது. ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு நடுக்கடலில் இருக்கும் உணர்வை அப்படியே கடத்துகிறது. இயக்குநர் மாதவ் ராமதாசன் ஒரு 'சர்வைவல் த்ரில்லர்' பாணியிலான கதையைத் தேர்ந்தெடுத்து நேர்த்தியாக இயக்கியுள்ளார்.
சரத்குமாரின் மிரட்டலான 'மேக்-ஓவர்' மற்றும் நடிப்பு. நடுக்கடலில் நடக்கும் விறுவிறுப்பான சர்வைவல் காட்சிகள். படத்தில் வரும் வளர்ப்பு நாயின் உணர்ச்சிகரமான பங்களிப்பு ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.
படத்தின் மைனஸ் என்னவென்றால், இரண்டாம் பாதியில் நீண்ட நேரம் ஒரே இடத்திற்குள் கதை நகர்வது சற்று சலிப்பைத் தருகிறது. கிளைமாக்ஸ் நோக்கிச் செல்லும் போது வரும் பாடல்கள் கதையின் வேகத்தைத் தடை செய்கின்றன.
'ஆழி' - ஒரு மனிதனின் அதிகாரத்திற்கும், இன்னொருவனின் உயிர் பிழைக்கும் போராட்டத்திற்கும் இடையே நடுக்கடலில் நடக்கும் சுவாரஸ்யமான பயணம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும், சரத்குமாரின் நடிப்புக்காகவும், வித்தியாசமான மேக்கிங்கிற்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.