
கோலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சூப்பர் ஸ்டாராக வலம் வந்த விஜய், அரசியலுக்கு வருவதாக அறிவித்த கையோடு, 'ஜனநாயகன் தான் என் கடைசி சினிமா' என்று சொல்லியிருந்தார். அன்றிலிருந்து பயங்கர ஹைப் ஏறிய படம்தான் எச்.வினோத் இயக்கிய 'ஜனநாயகன்'. பொங்கல் ரிலீஸாக வரவேண்டிய இந்தப் படம், சென்சார் பிரச்சினைகளால் ஆறு மாசம் தள்ளிப்போய் தியேட்டருக்கு வந்திருக்கிறது. படம் ரிலீஸாகும் நேரத்தில், நிஜமாகவே விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வு. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய இந்தப் படம், விஜய் திரையில் வந்து ஓட்டு கேட்பது போன்ற ஒரு ஃபீலைக் கொடுக்கிறது.
தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து ஹிட்டான 'பகவந்த் கேசரி' படத்தின் கதைக்களத்தை எடுத்து, அதை வைத்து எச். வினோத் 'ஜனநாயகன்' படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். 'பகவந்த் கேசரி'யை முழுவதுமாக ஒரு தேர்தல் அரசியல் கதைக்களத்திற்கு மாற்றினால், அதுதான் 'ஜனநாயகன்'. தளபதி வெற்றி கொண்டான் என்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிதான் விஜய்யின் கதாபாத்திரம். ஆனால், நாம் அவரை முதலில் ஒரு சிறைக் கைதியாகத்தான் பார்க்கிறோம். அவர் யார், என்ன செய்தார், எப்படி சிறைக்கு வந்தார் என்பதை எச்.வினோத் சீக்கிரமே விளக்கிவிடுகிறார். அதன்பிறகு, ஹீரோ தளபதியுடன் நம்மையும் கதைக்குள் இழுத்துச் செல்கிறார்.
ஹீரோவுக்கு இணையாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படம் இது. பாபி தியோல் நடித்த ஜான் ஹிம்லர் என்கிற அமரீஷ் பூஜாரிதான் மெயின் வில்லன் என்றாலும், பிரகாஷ் ராஜ் நடித்த ரங்கசாமி கதாபாத்திரத்திற்கும் நிறைய ஸ்கிரீன் ஸ்பேஸ் இருக்கிறது. தளபதி வெற்றி கொண்டானைப் போலவே, அமரீஷ் பூஜாரியும் ஒரு காலத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர்தான். சூழ்நிலைகள் அவரை வேறு பாதைக்குத் திருப்பிவிடுகின்றன. முதலமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் அதிகார மையங்களை மொத்தமாகக் கட்டுப்படுத்தும் ஒரு சூப்பர் பவராக இருக்கும் ரங்கசாமி கதாபாத்திரம், விஜய்யின் முக்கிய அரசியல் எதிரியாகக் கருதப்படும் எம்.கே. ஸ்டாலினை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதோ என்று படம் பார்க்கும்போது தோன்றுகிறது. 'தலைமுறைகளாக நாங்கதான் ஆட்சியில் இருக்கோம், இனியும் அப்படித்தான்' என்று ரங்கசாமி ஒரு காட்சியில் பேசுகிறார்.
வில்லன்கள் மற்றும் ஹீரோவின் பாதைகளை தனித்தனியாகக் காட்டி, எச். வினோத் கதையைத் தொடங்குகிறார். முதலில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் போகும் இந்தக் கதைகள், நேருக்கு நேர் சந்திக்கும் இடத்தில்தான் படம் வேகமெடுக்கிறது. விஜய் இதற்கு முன் நடித்த பல படங்களின் கதாபாத்திரங்களிலிருந்து, தளபதி வெற்றி கொண்டான் பெரிய அளவில் வேறுபடவில்லை. தனக்கு பிரியமானவர்களுக்காகவும், நாட்டுக்காகவும் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நபர். தனது வாழ்க்கைக்குள் தங்கை போல வரும் விஜி என்கிற விஜயலட்சுமிக்கும், தளபதிக்கும் இடையிலான பாசம்தான் படத்தின் எமோஷனல் மையம். படத்தின் கதையை நகர்த்துவதிலும் இந்த உறவு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மமிதா பைஜுவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை, இந்தப் படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் காட்டுகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாபி தியோலின் நடிப்பு நன்றாக இருந்தாலும் அவரின் கதாபாத்திரம் இன்னும் ஸ்ட்ராங்க் ஆக அமைத்திருக்கலாம் என்கிற உணர்வைக் கொடுக்கிறது. பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம், நாம் இதற்கு முன் பார்த்த அவருடைய பல கதாபாத்திரங்களை ஞாபகப்படுத்தினாலும், ரங்கசாமியாக அவர் சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள். இவ்வளவு நீளம் இருந்தும், தேவைக்கு அதிகமான துணைக்கதைகள் இருப்பது ஒரு குறை. தமிழ்நாடு தேர்தலுக்கு முன் ரிலீஸ் செய்ய வேண்டிய படம், விஜய்யின் கடைசிப் படம் என எச். வினோத் மீது பெரிய அழுத்தம் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. சத்யன் சூரியன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் செய்வது போல, இந்த முறை அனிருத்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 'முதலமைச்சர் தளபதி விஜய்' என்ற டைட்டில் கார்டு முதல் முறையாகவும், அவர் சொன்னபடி கடைசி முறையாகவும் திரையில் தோன்றும் படம் இது. விஜய் என்ற என்டர்டெயினர் ரசிகர்களுக்கு யாராக இருந்தார் என்பதை படத்தின் எண்ட் கிரெடிட்ஸ் காட்டுகிறது. நிச்சயம் அவரது ரசிகர்கள் அவரை பெரிய திரையில் மிஸ் செய்வார்கள்.