CM Joseph Vijay Vs Velumurugan : இன்று தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக பாடப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் எதிர்வினையாற்றியுள்ளார்.
இன்று தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சராக திரு ஜோசப் விஜய் அவர்களும், அவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக பாடப்பட்டது. தமிழ்நாடு மரபுகளின்படி அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாகவும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவதும் மரபாக இருந்து வருகிறது. இந்த மரபு இன்று மீறப்பட்டுள்ளதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இதற்கு கடும் எதிர்வினையாற்றியுள்ளார்.
25
தமிழ்நாடு மரபு புறக்கணிக்கப்பட்டுள்ளது
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தமிழக அரசின் புதிய பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழர் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல், பண்பாட்டு மற்றும் அரசு மரபுகளில், எந்த அரசு விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் உயரிய நடைமுறையாகும். ஆனால், இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், இந்தப் பாரம்பரிய மரபு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
35
வந்தே மாதரம் திணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று
உலகின் தொன்மையான மொழி, மனிதகுலத்தின் முதன்மொழி, பல்வேறு தேசிய இனங்களின் தாய் மொழிகளுக்கெல்லாம் தாயானமொழி, ஆயிரமாயிரமாண்டு நாகரிகத்தின் அடையாளமான நமது தாய்மொழி தமிழுக்கு உரிய மரியாதை வழங்கப்படாமல், ஆளுநர் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், தாய்மொழி தமிழைப் பின்தள்ளியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். அதோடு, தமிழ்நாட்டின் நடைமுறையில் இல்லாத வந்தே மாதரம் பாடலை முதலாவதாகத் திணிக்கப்பட்டு இசைத்ததும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் கோரிக்கையல்ல. அது தமிழர் இனத்தின் அடிப்படை உணர்வும் உரிமையும் ஆகும். மொழியை மதிக்காத ஆட்சி, மக்களின் மனதை மதிக்காத ஆட்சியாகவே பார்க்கப்படும். அதோடு, இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதை தொடர்பான அரசின் பாரம்பரிய நடைமுறைகள், எந்தச் சூழலிலும் மீறப்படாதவாறு உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.” என்று தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
55
முதலமைச்சர் கவனிக்க வேண்டும்
தமிழக அரசின் இந்த விழாவில் எங்கேயோ தவறு நடந்திருப்பதாகவும், இது மறைமுகமாக சமஸ்கிருதத்தை முன்னிறுத்தும் முயற்சி என்றும், தமிழுக்கு எந்த குறைவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முதலமைச்சரின் தலையாயக் கடமையாகும், அந்த தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் முதன்மையான வேலை என்றும் பல தரப்பிலிருந்து தமிழக அரசை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.