தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த பொதுமக்கள் - வைரல் புகைப்படங்கள் !!

First Published Nov 11, 2022, 7:10 PM IST

காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றனர்.

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று பிற்பகலில் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.  இதையடுத்து, பிரதமர் மோடி திண்டுக்கல்லுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.

திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது பேசிய அவர், ‘கிராமப்புற மேம்பாட்டிற்கான அறிவாலயமாக திகழும் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். குஜராத்தில் பிறந்து ஒற்றுமை, சமூக நல்லியக்கத்தை வலியுறத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த காந்திக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள உறவு மிக மிக அதிகம்தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வந்த காந்தி தமிழை விரும்பி படித்தவர்' என்று பேசினார்.

காந்தி கிராம பல்கலை விழாவில் பிரதமர் மோடி வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், காந்திய சிந்தனைகள் இன்றைக்கு பல சவால்களுக்கு பொருத்தமானதாக உள்ளது. மகாத்மா காந்தியை பல ஆண்டுகளாக மறந்துவிட்ட நிலையை மாற்றினோம். காதி விற்பனையை பல மடங்கு 8 ஆண்டுகளில் அதிகரித்துள்ளோம் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், கிராமங்களின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் உழைக்க வேண்டும். இயற்கை விவசாயம் நாட்டின் உர தேவையை குறைக்கும். சுதேச இயக்கத்தின் மையமாக இருந்தது தமிழ்நாடு. சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்த விழ்ப்புணர்வுடன் இருந்திருக்கின்றனர் என்றார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ‘வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் பொதுமக்கள். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

click me!