Chennai Flood: களப்பணியில் 5வது நாள்... என்ன செய்தார் CM... புகைப்படத்தொகுப்பு..!!

First Published Nov 12, 2021, 3:34 PM IST

தமிழக முதல்வர் ஸ்டாலின் (Mk Stalin) இன்று 5 ஆவது நாளாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மழைவெள்ள பாதிப்புகளை நேரில் பார்த்து ஆய்வு செய்தது மட்டும் இன்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

கடந்த மாதம் 25ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில்  ஆங்காங்கே  லேசாக பெய்த மழை சில தினங்களில் வேகம் எடுக்க தொடங்கியது.

டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கடலூர், சேலம், கோவை, தென்காசி, நெல்லை என மழை பிச்சு உதறியது. மிதமான மழை, பலத்த மழை, கனமழை, அதி கனமழை என நாள்தோறும் வானிலை அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகியது.

அதிலும் தீபாவளிக்கு பிறகு நிலைமை மெல்ல, மெல்ல தலைகீழானது. வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களை உண்டு இல்லை என்று வெளுத்து வாங்கியது.

குறிப்பாக சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த மழை தொடர்ந்து 4 நாட்களுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.

சென்னையை புரட்டி போடும் அளவுக்கு மழை போட்டு தாக்கியது. சாலைகளில் வெள்ளம், (Chennai Flood) வீடுகளில் வெள்ளம், எங்கும் மழைநீர், என மக்கள் தவித்து வருகிறார்கள்.

இன்றைய தினம் மழை சற்று குறைந்தாலும்,சென்னை வீடுகளில் புகுந்த தண்ணீர் வெளியேறிய பாடு இல்லை. தொடர்ந்து கரண்ட் பிரச்னையும் நீடித்து வருகிறது.

தண்ணீரில் குழந்தைகள், வயதானவர்களை வைத்து கொண்டு... இருக்க இடமில்லாமல் தவித்து வரும் மக்களுக்கு உடனடியாக களத்தில் இறங்கி தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில், 5 ஆவது நாளான இன்று... முதலமைச்சர் முக ஸ்டாலின் களப்பணியில் இறங்கி மக்களுக்கு பல்வேறு நிவாரண பணிகள் மற்றும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், கனமழையினால் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை இன்று காலை 09.45 மணி முதல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழை வெள்ளத்தால் நிரம்பி வழியும் சென்னையில் உள்ள நாராயணபுரம் ஏரி, ரேடியல் ரிங் ரோடு ஆகியவற்றை பார்வையிட்டு அதன் நிலவரத்தை கேட்டறிந்தார்.

பின்னர் நிவாரண முகாம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மாம்பாக்கம், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை போன்றவற்றை பார்வையிட்டு, பல்வேறு நல உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.

ஆதனூர் அடையாறு ஆற்றின் பூஜ்யப் புள்ளி மற்றும் சீராக்கி (Zero Point and regulator),  அடையாறு ஆற்றுப் பாலம், மன்னிவாக்கம் ரூபி பில்டர்ஸ் போன்றவற்றை பார்வையிட்டு அதன் நிலவரத்தை கேட்டறிந்தார் முதல்வர்.

இதை தொடர்ந்து முடிச்சூரில் வெள்ளம் தணிக்கும் பணிகள் (Flood Mitigation Works), நிவாரண முகாம், சி.எஸ்.ஐ. சர்ச் ஆகியவற்றை ஓய்வில்லாமல் பார்வையிட்டு மக்களின் நிலையை கேட்டறிந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் தான் இவை.

click me!