எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்ற முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிகிறது. நிர்வாகிகள் பலரும் விலகி வரும் நிலையில், மீண்டும் இரட்டை இலையை தளிர்க்க வைக்க அவர் போயஸ்கார்டன் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, திராவிட அரசியலின் அஸ்திவாரமாக விளங்கும் அ.தி.மு.க-வில் மிகப்பெரிய சலசலப்புகளும், உட்கட்சிப் பூசல்களும் வெடித்துள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க-வினர் சாரை சாரையாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-விற்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இந்த அசாதாரணச் சூழலில், சமூக வலைத்தளங்களில் "சின்னம்மா ரிட்டன்ஸ்.!" மற்றும் "மீண்டும் துளிர்க்கும் இரட்டை இலை" என்ற வாசகங்களுடன் வெளியாகும் மீம்ஸ்கள், வெறும் நகைச்சுவையாகக் கடந்து போக முடியாத அளவிற்குத் தீவிரமான அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
25
த.வெ.க-வின் எழுச்சியும் அ.தி.மு.க-வின் சரிவும்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க-விற்கு ஆதரவளித்ததாகக் கூறி, அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், பி. தங்கமணி மற்றும் நத்தம் விசுவநாதன் ஆகியோரின் கட்சிப் பதவிகளைப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் பறித்தார். இது கட்சிக்குள் பெரும் அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது.
மறுபுறம், கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் (விராலிமலை) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவிகளையும், அ.தி.மு.க-வையும் விட்டு விலகியுள்ளது அ.தி.மு.க தலைமைக்கு விழுந்த பலத்த அடியாகும். த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி மறுத்ததே தங்களது விலகலுக்குக் காரணம் என்று அவர்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வின் பலம் 41 ஆகக் குறைந்துள்ளது.
35
எடப்பாடிக்கு எதிராகப் பறக்கும் போர்க்கொடி
பதவி பறிக்கப்பட்ட நிலையிலும், அ.தி.மு.க-வின் கொங்கு மண்டல மற்றும் வட மாவட்டப் பலமாக விளங்கும் தங்கமணி, வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தீவிரமான போர்க்கொடியைத் தூக்கியுள்ளனர்.
"கட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்; தேவைப்பட்டால் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம் கொண்டு வர வேண்டும்" என்ற ரீதியில் சி.வி. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் போர்க்குரல் எழுப்பி வருவதாகத் தெரிகிறது. ஒற்றைத் தலைமை என்ற பிடிவாதத்தால் கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து வருவதை உணர்ந்தே இந்த மூத்த தலைவர்கள் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சி.வி. சண்முகம் மீண்டும் சின்னம்மா கோஷம் போட தொடங்கி இருப்பது அதிமுகவை சேர்ந்த பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
இந்த ஒட்டுமொத்த அரசியல் புயலுக்கு மத்தியில், கட்சியைத் தக்கவைக்கவும், தொண்டர்கள் த.வெ.க-விற்கு மாறுவதைத் தடுக்கவும் எடப்பாடி பழனிசாமி ஒரு அதிரடி முடிவை எடுக்க உள்ளதாகக் கூறப்படும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். தன்னை அரசியல் ரீதியாக உயர்த்திய 'சின்னம்மா' சசிகலாவை, எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியைப் பலப்படுத்துதல்: பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கிகளை ஒன்றிணைக்க இந்தச் சந்திப்பு அடித்தளமாக அமையலாம்.
தலைமை மாற்றம்: சசிகலாவின் ஆசி மற்றும் மூத்த நிர்வாகிகளின் சம்மதத்துடன் கட்சியில் புதிய அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்கப்படலாம்.
55
சசிகலாவும் எடப்பாடியும் கரம் கோர்த்தால் மட்டுமே இது நடக்கும்
அ.தி.மு.க-வின் இந்த உட்கட்சி மோதல்களும், அடுத்தடுத்து நடக்கும் எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவும் தமிழ்நாட்டில் விரைவில் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் உருவாகக் காரணமாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் வலம் வரும் "சின்னம்மா ரிட்டன்ஸ்" மீம்ஸ்கள் நிஜமாகி, சசிகலாவும் எடப்பாடியும் கரம் கோர்த்தால் மட்டுமே சரிந்து வரும் அ.தி.மு.க-வைக் காப்பாற்ற முடியும் என்பதே தற்போதைய யதார்த்தம் என அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்னர். "இரட்டை இலை" மீண்டும் துளிர்க்குமா அல்லது த.வெ.க-வின் அலையில் அடித்துச் செல்லப்படுமா என்பதை இ.பி.எஸ்-சின் அடுத்தகட்ட நகர்வுகளே தீர்மானிக்கும்!