
"உங்கள் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக தலைமை அல்ல; திமுகவின் அடிமட்டட தொண்டன்கூட என்றைக்கும் பயப்படமாட்டான்” என பதற்றத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூட்டம் சேர்க்க முயற்சிப்பதாக எதிர்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
திருவாரூரில் பேசிய அவர், ‘‘திமுக-வை அழிப்போம்னு சொல்லிட்டு எத்தனை பேர் வந்தாலும் அவங்க எல்லாரையும் ஓட விடுற இயக்கம் நம்ம இயக்கம். ஒரு இயக்கம் எந்த அளவுக்கு செயல்படுமோ, ஒரு இயக்கம் எந்த அளவுக்கு இயங்க வேண்டுமோ அதே அளவுக்கு ஒரு தனி மனிதனாக இருந்து இயங்கி காட்டியவர் தான் ஐயா திருவிடம். ஐயா திருவிடம் மட்டுமல்ல, இங்கு வந்திருக்கக்கூடிய, இயக்கத்தில் இருக்கக்கூடிய கருப்பு சிவப்பு தொடர்களாகிய நீங்கள் அத்தனை பேருமே இன்றைக்கு ஒரு தனி மனித இயக்கமாக நாம் வாழ்ந்து காட்ட வேண்டும்.
நீங்கள் ஒவ்வொருவருமே ஒரு தனி மனித இயக்கமாக இருப்பதால் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை, நம்முடைய இயக்கத்தை அழிப்போம் என்று சொல்லிக் கொண்டு எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் ஓட விடும் இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். கழக உடன்பிறப்புகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு சவால் விட்டு இருக்கிறார். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு உடன்பிறப்புகள் கொள்கை பற்றோடு இருக்கிறார்கள் என்று சொன்னேன். இளைஞர்கள் மட்டுமல்ல, கழகத்தினுடைய உடன்பிறப்புகள், கலைஞருடைய உடன்பிறப்புகள் நிற்போம். திமுக என்பது ஐயா திருவிடம் போன்ற லட்சக்கணக்கான, தன்னளவில்லா தொண்டர்களைக் கொண்ட ஒரு இயக்கம்.
உங்களுடைய மிரட்டலுக்கு எல்லாம் திமுக தலைமை அல்ல, திமுகவுடைய அடிமட்ட தொண்டன் கூட என்றைக்கும் பயப்பட மாட்டார்கள். பாஜக சங்கிகளான பழைய அடிமைகள், புதுப்புது அடிமைகளை தேடி கண்டுபிடிக்கிறார்கள். கண்டுபிடித்து அவர்களுடைய கூட்டணி கட்சிகள் வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக நம்மை எதிர்க்க வருவார்கள். அவர்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுடைய ஆதரவோடு விரட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. திமுக தொண்டனுக்கு இருக்கிறது. நமக்கு அதிகமாக இருக்கிறது.
2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் கிடையாது. இது தமிழ்நாட்டுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற ஒரு தேர்தல். இது சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் நடக்கிற தேர்தல். சமூக நீதிக்கும், சமூக அநீதிக்கும் இடையே நடக்கின்ற ஒரு தேர்தல். மாநில உரிமைகளுக்கும், டெல்லி சர்வாதிகாரத்தில் அதிகாரத்திற்கு நடக்கிற ஒரு தேர்தல். ஆகவே 2026 சட்டமன்ற தேர்தலில் கழக அணி குறைந்தது 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் நிச்சயம் உதயசூரியன், நம்முடைய கூட்டணி சின்னம் ஜெயித்தே ஆக வேண்டும் அதற்கு ஒரு தொடக்கமாக இந்த திருவாரூர் மாவட்டம் நிச்சயமாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கழகம் ஏழாவது முறையாக ஆட்சியில் அமர வேண்டும். தொடர்ந்து இரண்டாவது முறையாக நம்முடைய தலைவர் முதலமைச்சர் பொறுப்பில் உட்கார வேண்டும். அடுத்து எண்ணி சரியாக 100 நாட்கள் தான் இருக்கிறது. அடுத்து வருகிற நூறு நாட்களும் நம்முடைய தேர்தல் பிரச்சாரத்தை, வியூகத்தை நம்முடைய அரசின் சாதனைகளை தொடர்ந்து மக்களிடம் ஞாபகப்படுத்தி, மக்கள் அத்தனை பேரும் உதயசூரியன் சின்னத்தில் நம்முடைய கூட்டணி கட்சி சின்னங்களில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்றால் அடுத்த 100 நாட்கள் நாம் அத்தனை பேரும் களத்தில் நின்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
அவரது பேச்சை விமர்சித்துள்ள நடுநிலையாளர்கள், "நான் பயப்பட மாட்டேன், பயப்பட மாட்டேன் என தினமும் 100 தடவை சொல்வது தான் திமுக தலைவர்கள் கடும் பயத்தில் இருப்பதை வெளிப்படுத்துகிறது. தொண்டன் எதற்கு பயப்பட வேண்டும். திமுக தொண்டனுக்கு என்ன பாரம் உள்ளது? தொண்டர்கள் ஊழல் செய்திருந்தால், கொள்ளை அடித்திருந்தால் உதயநிதியைப்போல பதறிப்போய் களத்தில் வேலை பார்ப்பான். தொண்டனையா அமலாக்கத்துறை, சிபிஐ மிரட்டப்போகிறது? நாளை காலை ஓட்டு போடுவான்... நாளை மறுநாள் மீண்டும் வேலை பார்ப்பான். ‘திமுக தலைவர்கள் எங்களுக்கு பயமில்லை... பயம் இல்லை என திமுகவினர் நடித்துக் காட்டுகிறார்கள் என இதைத்தான் விஜய் சொல்கிறார் போல’’ என்கின்றனர்.