
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் விஜயின் தவெக வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. ஒண்ணு திமுக இன்னொண்ணு தவெக இடையே தான் போட்டியே என கூறி வரும் விஜய் திமுகவின் நீண்ட கால கூட்டணி கட்சியான காங்கிரஸை கூட்டணிக்கு இழுக்க முயற்சித்து வருகிறார்.
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது விஜயை போனில் அழைத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். தவெக கூட்டணியை காங்கிரஸ் தலைமை விரும்பினாலும் 22 ஆண்டுகளாக நீடிக்கும் திமுகவுடனான கூட்டணியை, திடீரென முறித்துக்கொள்ள விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.,க்களின் பலம் பாஜக அரசை எதிர்கொள்ள அவசியம் என காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. ஆனாலும், ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலரும், தவெக கூட்டணியை விரும்புகின்றனர். காங்கிரஸ் மேலிட தலைவர்களின் விருப்பத்துடன், அக்கட்சியின் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, கடந்த 5ம் தேதி விஜயை சென்னை, பனையூரில் சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பு திமுகலைமயை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில், தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகளை கொடுக்க தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் இருந்து ராகுல் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘தமிழகத்தின் பெரிய கட்சியாக இருந்த அதிமுகவின் நிலை இப்போது மோசமாக உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அதிமுக நிலைக்குமா? என்பதே சந்தேகம்தான். இதைப் பயன்படுத்தி, அதிமுக இடத்திற்கு வர பாஜக திட்டமிடுகிறது. இதை தடுத்து, அதிமுக இடத்திற்கு தவெக வர வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் பாஜக எழுச்சியை தடுக்க முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி போன்றோர் நினைக்கின்றனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில், தவெக 20 சதவீத ஓட்டுகளை பெற்றாலே, அதிமுக இடத்தை பிடித்து விடும் என்பது காங்கிரஸ் மேலிடத்தின் கணிப்பு. இதன் காரணமாகவே, விஜயை சமீபத்தில் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தார். மக்களவை தேர்தல்தான் காங்கிரஸுக்கு முக்கியம். சட்டமன்ற தேர்தலில் வென்றாலும், திமுக ஆட்சியில் பங்கு தரப் போவதில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தலுடன், மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. அங்கு, பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் வருகின்றன. இது நடந்து, தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க இடங்களை பாஜக வென்றால்தேசிய அளவில் காங்கிரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.
எனவே, அதிமுக இடத்திற்கு பாஜக வராமல் தடுக்க தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என காங்கிரசில் உள்ள பலர் சோனியா, ராகுல் காந்தியிடம எடுத்துக் கூறி வருகின்றனர். இதை அவர்களும் மறுக்கவில்லை. அதேவேளை திமுக கூட்டணியை முறிக்கவும் தயங்குகின்றனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 41 தொகுதிகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது. இதற்கு திமுக உடன்படாவிட்டால் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்’’ எனக் கூறினார்.
காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, நேற்று தனது சமூக வலைதள பதிவில், ‘இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2010ல் உ.பி.,யின் மொத்த கடன் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது உ.பி.,யை விஞ்சி விட்டது தமிழகம். 'வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை அபாயத்துக்குரியதாக உள்ளது' என அவர் கூறியுள்ளார். அவர் திமுக அரசை நேரடியாகவே குற்றம்சாட்டி இருப்பது திமுகவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.