
2026 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. மொத்தம் 824 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று ஏப்ரல் 9 சில மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. ஐந்து மாநிலத்தின் தேர்தல் முடிவுகளும் மே நான்காம் தேதி வெளியாகின்றன.
அடுத்த சில ஆண்டுகளில் (2029 ஆம் ஆண்டு) வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் 5 சட்டமன்றங்களின் அரசாங்கங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தீர்மானிக்க உள்ளது. இதன் காரணமாக தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு இது அக்னி பரீட்சையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான மொத்த இடங்கள், பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள், தேர்தல் தேதி, போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணியும், அதிமுக தலைமையில் மெகா கூட்டணியும் அமைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் நாம் தமிழர், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல சிறிய கட்சிகள் தனித்துப் போட்டியென பலமுனைப் போட்டி உருவாகி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை ஆட்சி செய்து வரும் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக ஆட்சியை அமைப்பதற்கு முயன்று வருகிறார். மறுபுறம் இழந்த செல்வாக்கை மீட்க எடப்பாடி பழனிச்சாமியும் தீவிரம் காட்டி வருகிறார்.
தான் செயல்படுத்திய சமூக நலத் திட்டங்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் தங்களுக்கு வெற்றியைத் தேடி தரும் என்று திமுக நினைக்கிறது. மேலும் சட்டம் ஒழுங்கு, ஊழல் நிர்வாகம் தொடர்பான சிக்கல்களை முன்வைத்து அதிமுக பிரச்சாரம் செய்து வருகிறது. கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும் என்று வெளியாகி வரும் நிலையில் தமிழக தேர்தல் எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கேரளாவில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடந்து வருகிறது. கேரளாவில் இருமுனைப் போட்டியே எப்போதும் நிலவுகிறது. இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இடையே மாறி மாறி ஆட்சி அதிகாரம் பகிரப்பட்டு வருகிறது. 2016 முதல் தொடர்ந்து பினராயி விஜயின் தலைமையில் LDF இருமுறை ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலிலும் LDF மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயன்று வருகிறது.
அதே நேரத்தில் UDF ஆட்சிக்கு வர துடிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தனது எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த முயல்கிறது. ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிர்வாக பிரச்சனை, வேலையின்மை ஆகியவற்றை முன்வைத்து UDF பிரச்சாரம் செய்கிறது. அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை முன்னிலை வைத்து LDF வாக்குகளை சேகரித்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது. மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து வருகிறார். தற்போது நான்காவது முறையாக அவர் வெற்றி பெறும் முனைப்பில் இருந்து வருகிறார். சமூக குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழல் புகார்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
பாஜக மமதாவின் கோட்டையை தகர்த்து ஆட்சியைப் பிடிக்க வியூகங்களை வகுத்து வருகிறது. தொடர்ந்து மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை மமதா பானர்ஜி நடத்தி வருகிறார். ஆளுநர் ரவி நியமனம் போன்றவை தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தின் அரசியல் களத்தை சூடாக்கி உள்ளன.
அஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு வரை காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்தது. இடையில் சில காலம் ஜனதா கட்சி ஆட்சி புரிந்து வந்தது. 2016 ஆம் ஆண்டு பாஜக வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. 2021 ஆம் ஆண்டு பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஹிமந்த பிஸ்வா ஷர்மா முதலமைச்சராக பதவி ஏற்றார்.
இங்கு வங்கதேசத்துடனான எல்லை பகிர்தல் பிரச்சனை மையம் கொண்டுள்ளது. மேலும் பாஜகவின் ஊழல் மிகுந்த ஆட்சி மற்றும் மத அரசியல் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. பாஜக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதில் ஊழல், பாலங்கள் அமைப்பதில் ஊழல், சாலைகளை விரிவாக்கம் செய்வதில் ஊழல் என்று அரசு தோல்வி அடைந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது. ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி 2026 தேர்தலில் கடுமையான போட்டியை கொடுக்க இருக்கிறது. மத்திய அரசின் தலையீடு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து உள்ளன. மேலும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளின் தாக்கம் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.