
காலையில் எழுந்ததுமே பலர் நடைபயிற்சி அல்லது ஜாகிங் செல்வார்கள். இது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். இளமையில் உடலை பராமரிப்பதை விட வயது அதிகரிக்கும் போது அதை ஆரோக்கியமாக வைப்பது சவாலான விஷயம். ஆனால் இப்போது இளைய வயதுள்ளவர்களே நடக்கும்போது அல்லது ஓடும்போது சோர்வடைகிறார்கள். படிக்கட்டுகளில் ஏறுவதற்கு பலர் சிரமப்படுகின்றனர்.
வயது குறைந்தவர்கள் நடக்கும்போது கை, கால் வலிக்கிறது எனில் அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிச்சயம் மாற்றம் அவசியம். சாதாரணமாக நடக்கும்போது அல்லது படிக்கட்டுகளில் ஏறும் போது மூச்சுத் திணறல் ஏற்படுவது அவர்களுடைய குறைந்த ஆற்றல் அளவுகள் அல்லது உடல் உழைப்பு இல்லாமையை குறிக்கிறது.
நாம் சில உடல் செயல்பாடுகளில் ஈடுபட்ட பிறகு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஏனென்றால் நமக்கு இரத்த சோகை, உடல் பருமன், நீரிழிவு நோய், மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்று இருப்பது தான் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். இந்த மாதிரி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது முக்கியம். அதற்கு என்னென்ன மாதிரியான பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என இங்கு காணலாம்.
படிக்கட்டு ஏறுதலின் நன்மைகள்:
படிக்கட்டுகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் சிலருக்கு கடுமையாக மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் அவர்கள் படிக்கட்டுகளைத் தவிர்ப்பார்கள். ஆனால் படிக்கட்டுகளில் ஏறுவது உடலுக்கு நன்மை பயக்கும். ஆகவே எப்போதும் படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும். இதனால் தசைகளை வலுப்படுத்துவதோடு, உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும் முடிகிறது. உடலில் எடை இழப்பு, இதயம், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
தினமும் படிக்கட்டு ஏறி இறங்கும் நபருக்கு உயிர் வாழும் வாய்ப்பு 76% அதிகரிக்கிறது. படிக்கட்டு ஏறுதல் அவரின் இறக்கும் அபாயத்தை 24% குறைக்க முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன. படிக்கட்டுகளில் ஏறுவதால் மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது. கால்கள் வலுவாக செயல்படுகின்றன.
படிக்கட்டில் ஏறும்போது மூச்சு திணறாமல் இருக்க பின்வரும் நான்கு விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமானது.
சரியான தூக்கம்:
நாள்தோறும் காலையில் தாமதமாக எழும் பழக்கம் இருந்தால் அதனை மாற்ற வேண்டும். இரவில் 10 மணிக்குள்ளாக தூங்க முயற்சி செய்ய வேண்டும். அப்படி தூங்கினால் அதிகாலையில் எழுந்திருக்க முடியும். ஒவ்வொரு நாளையும் உடற்பயிற்சியுடன் தொடங்குங்கள். இதனால் உங்களுடைய சுவாசப் பிரச்சனை தீரும்.
உடற்பயிற்சி:
ஒரு சிறிய நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது சோர்வாக உணர்ந்தால் உங்களுடைய ஆற்றல் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்கு யோகா மாதிரியான சுவாசப் பயிற்சிகள், எடைப் பயிற்சி (workout with weights), கார்டியோவாஸ்குலர் செயல்பாடு (cardio workout) போன்றவற்றை செய்யுங்கள். இது உங்களுடைய சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவும். இதனால் உற்சாகமாக உணர்வீர்கள்.
இதையும் படிங்க: வாக்கிங் வயசுக்கு ஏத்த மாதிரி போகனும்.. 60 வயசுக்கு மேல 'இவ்ளோ' ஸ்டெப்ஸ் நடந்தாலே ஆரோக்கியம் தான்!!
உணவுமுறை:
நொறுக்குத் தீனி உண்பதை குறைத்து கொள்ளுங்கள். எப்போதும் உணவில் ஆரோக்கியமானவற்றை
மட்டும் சேருங்கள். உங்களை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான அளவு தண்ணீர் மற்றும் பிற திரவங்களை அருந்த வேண்டும்.
புகை & மதுவுக்கு 'நோ':
சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கங்கள் சுவாச பிரச்சனைகளை உண்டாக்கும் ஏற்படுத்தும். இந்த பழக்கங்கள் உள்ள ஒருவர் விரைவில் சோர்வடைகிறார். அதிகளவில் சிகரெட், மது போன்றவை எடுத்து கொள்ளுதல் நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: வெறும் 10 நிமிடங்கள் புல்வெளியில் வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா?