Vendakkai Kara Kuzhambu: நம் வீட்டில் எவ்வளவு நன்றாக காரக்குழம்பு வைத்தாலும் அது ஹோட்டல் சுவையில் வராது. ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றினால் ஹோட்டல் டேஸ்ட்டில் வெண்டைக்காய் காரக்குழம்பு தயாராகிவிடும்.
மதிய நேரத்துச் சாப்பாட்டுக்கு என்ன குழம்பு வைப்பது என்பது பலரின் அன்றாடக் கேள்வி. அதிலும் வெண்டைக்காய் இருந்தால், அதன் வழவழப்புத் தன்மை காரணமாகப் பலரும் அதைத் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், சரியான பக்குவத்தில் செய்தால், வெண்டைக்காய் காரக் குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. ஹோட்டல் ஸ்டைலில் எப்படி வெண்டைக்காய் காரக்குழம்பு வைப்பது எப்படி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வழவழப்புத் தன்மையே இல்லாமல், சுண்டி இழுக்கும் சுவையில் காரக் குழம்பு வைப்பதற்கான எளிய செய்முறை இதோ. இந்தக் குழம்பின் மிக முக்கியமான கட்டமே வெண்டைக்காயைத் தயார் செய்வதுதான். வெண்டைக்காயை நன்கு கழுவி, ஒரு துணியால் துடைத்து, ஈரமே இல்லாமல் காய வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, சுமார் ஒரு இன்ச் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இதுதான் வழவழப்புத் தன்மையைக் குறைப்பதற்கான முதல் படி.
முதலில், ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு மிதமான தீயில் வதக்க வேண்டும். அதன் நிறம் சற்று மாறி, வழவழப்புத் தன்மை முழுவதும் நீங்கும் வரை வதக்கி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவசரப்பட்டு அதிக தீயில் வதக்கினால், காய் கருகிவிடும். அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை மற்றும் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
சின்ன வெங்காயம் இந்த குழம்புக்கு ஒரு தனித்துவமான சுவையைக் கொடுக்கும். வெங்காயம் வதங்கிய பிறகு, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது நன்கு மசியும் வரை வதக்க வேண்டும். பின்னர், மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்குங்கள். இப்போது, வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக, ஊறவைத்த புளியிலிருந்து கெட்டியாகக் கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிறிய துண்டு வெல்லத்தைச் சேர்க்கவும்.
வெல்லம், புளிப்பின் தன்மையை சமன்படுத்தி, குழம்புக்கு ஒரு அருமையான சுவையைக் கொடுக்கும். குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான வெண்டைக்காய் காரக் குழம்பு தயார். இதைச் சூடான சாதத்துடன் பரிமாறினால், வேறு எதுவும் தேவைப்படாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.