பிணத்துடன் ஆட்டம் போட்டு கொண்டாடி மகிழும் வினோத சடங்கு.. மடகாஸ்கரில் விலகாமல் இருக்கும் மர்மத்தின் வரலாறு!

First Published Feb 3, 2023, 1:10 PM IST

குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்தால் நம் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடும். மனம் பாரம் ஆகும். ஆனால் இந்த நாட்டில் மக்கள் இறந்த சடலத்துடன் நடனமாடி கொண்டாடுகிறார்கள். 

மனிதனின் பிறப்பை போல இறப்பையும் முன்குறிக்க முடியாது. அது ஒருநாள் நிகழ்ந்தே தீரும். நம்முடைய வீட்டில் ஒருவர் உயிரிழந்தால் மொத்த குடும்பமும் சோகமாக தத்தளிக்கும். எல்லா நாடுகளிலும் இறந்தவர்களுக்காக துக்கமாக தான் இருப்பார்கள். ஆனால் இந்த நாட்டில் ஒரு நபர் உயிரிழந்தால் அவர்களது போர்வையைத் தூக்கி பிடித்துக்கொண்டு நடனமாடவும், பாடவும் செய்கின்றனர். இந்த மக்கள் இறந்த உடல்களுடன் ஆடும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். அவர்கள் யார்? ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதை இங்கு காணலாம். 

மடகாஸ்கர் நாட்டில் தான் இந்த பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது. இங்கு யாராவது இறந்தால் மக்கள் துக்கம் கொள்வதில்லையாம். தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பிற்கு பிறகு விசித்திரமான வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். 

மடகாஸ்கரில், இந்த வழக்கத்தை ஃபமதிஹானா (எலும்புக்கூட்டை திருப்புதல்) என சொல்கிறார்கள். இறந்தவர்களின் உடல் எவ்வளவு சீக்கிரம் எலும்பு கூடாக மாறுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் விடுதலை அடைகிறார்கள் என மக்களிடையே நம்பிக்கை காணப்படுகிறது. இப்படியாக அவர்கள் புதிய வாழ்வில் நுழைவார்கள் எனவும் இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தான் அவர்களுக்கு ஒருவர் இறக்கும்போது துக்கப்பட தேவையில்லை என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது போலும். 

இறந்த உடல்களோடு நடனமாடுவதோடு இவர்கள் நிற்பதில்லை. அங்குள்ள மக்களிடம் இந்த சடங்கை குறித்து கேட்கும்போது இன்னும் சில சுவாரசியமான விஷயங்கள் தெரிய வந்தன. இறந்த உடல் சதையோடு உள்ள வரை, ஆன்மா வேறு உடலுக்குள் செல்ல முடியாமல் தவிக்குமாம். அதனால் மக்கள் தங்களின் ப்ரியமானவர்களின் சடலத்தை கல்லறையிலிருந்து வெளியே எடுத்து அவர்களோடு நடனமாடுகிறார்கள். 

உயிரிழந்தவர்களின் உடலுடன் பாட்டு பாடி நடனமாடி சடலத்தை புதைக்கிறார்கள். இந்த பாரம்பரியத்தை உயிரிழந்த இரண்டாவது ஆண்டு அல்லது ஏழாவது ஆண்டில் செய்கின்றனர். 

click me!