நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்த சில பழக்க வழக்கங்கள் பார்ப்பதற்கு பழைய நடைமுறை என்று தோன்றினாலும், அதில் உடல்நலனுக்கு நன்மை தரும் அம்சங்களும் உள்ளன. அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு ஆரோக்கியம் பெருகிடும் வாய்ப்புள்ளது. அதை புரிந்துகொண்டு நாம் நடந்துகொள்ளும் பட்சத்தி மருந்து, மாத்திரை, நோய் நொடிகள் எல்லாம் விலகி நிற்கும். உடல்நலன் சார்ந்த ஆரோக்கிய செயல்பாடுகள் குறித்து பேசும் போது, சம்மனங்காலிட்டு தரையில் அமர்வதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. இந்தியாவில் மட்டுமில்லாமல் தெற்காசியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் வாழும் மக்களிடம் இந்த பழக்கம் உள்ளது. நம்முடைய தமிழ்ச் சமூகத்தில், வாழ்வியல் சார்ந்த முக்கிய நடவடிக்கைகள் அனைத்தும், தரையில் அமர்ந்து தான் முடிவு செய்யப்படும். திருமணம், ஈமைக் கிரியை, குழந்தைக்கு காது குத்துவது, பஞ்சாயத்து பேசுவது உள்ளிட்ட நிகழ்வுகளின் போது அனைவரும் தரையில் அமர்ந்து தான் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் சம்மனங்காலிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பயனை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
உடல் எடை கட்டுக்குள் இருக்கும்
தரையில் உட்கார்ந்து எழுவது உடற்பயிற்சி செய்வதை போன்றது. சம்மனங்காலிட்டு சாப்பிடும் போது தான் உடல் நன்றாக அசையும். இது ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதுவரை மேலே உட்கார்ந்து அல்லது நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட்டு வருபவராக நீங்கள் இருந்தால், சிறிது நாட்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் உங்களுடைய உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றம் கிடைக்கும். அதற்கு காரணம் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, சாப்பாடு சாப்பிடுவது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.