முன்னதாக, ஜனவரி 15 அன்று, அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ், முறையான சுகாதார வசதிகள் கிடைப்பது ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அனைத்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனித்தனி கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்யுமாறு உயர் நீதிமன்றங்கள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது. மேலும், நான்கு மாதங்களுக்குள் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கோரியிருந்தது.
இன்று (புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், கல்கத்தா, டெல்லி மற்றும் பாட்னா உயர் நீதிமன்றங்கள் மட்டுமே, தீர்ப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளன. நாட்டில் மொத்தம் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.