
பழம்பெரும் அரசியல்வாதியும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார். 92 வயதான அவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில் “ ஸ்ரீ எஸ்.எம்.கிருஷ்ணா ஜி ஒரு குறிப்பிடத்தக்க தலைவர், அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்டார். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்தார். கர்நாடகாவின் முதலமைச்சராக மட்டுமின்றி, குறிப்பாக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அவர் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். எஸ்.எம். கிருஷ்ணா ஜி ஒரு சிறந்த வாசகர் மற்றும் சிந்தனையாளர்.
பல ஆண்டுகளாக ஸ்ரீ எஸ்.எம். கிருஷ்ணா ஜியுடன் தொடர்பு கொள்ள எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன, அந்த தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவால் நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
45 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்த கிருஷ்ணா, அக்கட்சியில் இருந்து விலகி 2017-ல் பாஜகவில் சேர்ந்தார். கிருஷ்ணாவுக்கு பிரேமா என்ற மனைவியும், சாம்பவி, மாளவிகா என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது வயதைக் காரணம் காட்டி, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த சூழலில் எஸ்.எம். கிருஷ்ணாவின் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் பிற பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த எஸ்.எம். கிருஷ்ணா?
1932-ம் ஆண்டு மே 1-ம் தேதி, கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளியில் பிறந்தார். மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் பட்டம் பெற்ற கிருஷ்ணா, பெங்களூரு அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் தனது கல்வியை அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தார். இந்தியாவில், பெங்களூரில் உள்ள ரேணுகாச்சார்யா சட்டக் கல்லூரியில் சர்வதேச சட்டப் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவில் அதிகம் படித்த திறமையான அரசியல்வாதிகளில் எஸ்.எம். கிருஷ்ணாவும் ஒருவர்.
அரசியல் வாழ்க்கை
கிருஷ்ணா முதன்முதலில் 1962 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 இல் மதூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றதன் மூலம் அவர் தேர்தல் அரசியலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
இருப்பினும், 1968 ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது முதன்முறையாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். ஆனால் எஸ்.எம் கிருஷ்ணா 1972 இல் மாநில அரசியலுக்குத் திரும்பினார். அவர் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன் பிறகு அவர் வர்த்தகம், தொழில்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரானார் (1972-1977).
கிருஷ்ணா 1980 இல் மீண்டும் மக்களவைக்கு வந்தார். அவர் 1983-84 க்கு இடையில் தொழில்துறை அமைச்சராகவும், 1984-85 இல் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார்.
1989-1992 வரை கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்தார். பின்னர், கிருஷ்ணா 1996 இல் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அக்டோபர் 1999 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் மே 2004 வரை கர்நாடகாவின் முதல்வராக எஸ்.கிருஷ்னா பதவி வகித்தார். பின்னர் அவர் டிசம்பர் 2004 இல் மகாராஷ்டிர ஆளுநரானார்.
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் 2009-2012 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வெளியுறவு அமைச்சராகவும் எஸ்.எம். கிருஷ்ணா இருந்தார்.
பெங்களூருவை உலகளாவிய நகராக மாற்றிய எஸ்.எம். கிருஷ்ணா
எஸ்.எம். கிருஷ்ணா தனது பதவிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக பெங்களூருவை மாற்றினார். மேலும் அவர் பெங்களூருவை உலக வரைபடத்தில் இணைத்த பெருமைக்குரியவர், இதன் விளைவாக இந்தியாவின் "சிலிக்கான் வேலி" ஆக பெங்களூரு வளர்ந்தது
2022 ஆம் ஆண்டில், கிருஷ்ணா "பெங்களூரு பிராண்ட்" ஐ பாதுகாக்க அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியிருந்தார். 1999 ஆம் ஆண்டு கிருஷ்ணா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பெங்களூர் அஜெண்டா டாஸ்க் ஃபோர்ஸை (பிஏடிஎஃப்) மறுசீரமைக்க அவர் பரிந்துரைத்தார்.
அறிவார்ந்த செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறனுக்காகப் புகழ் பெற்ற எஸ்.எம்.கிருஷ்ணா, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத தலைவராக இருந்தார். அவரின் புகழும், கர்நாடகாவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.