Heat Wave : இந்தியா முழுவதும் வீசும் வெப்ப அலையை எதிர்கொள்ள, நீர்ச்சத்துடன் இருப்பது, குழந்தைகளை கவனிப்பது, வாயில்லா ஜீவன்களுக்கு உதவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு, கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலின் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ள இந்தச் சூழலில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் (X) பிரதமர் மோடி அடுத்தடுத்து பதிவிட்ட ஆலோசனைகளின் விரிவான தொகுப்பைக் காண்போம்.
27
உடலை நீர்ச்சத்துடன் பராமரிப்பது அவசியம்
"இந்தியாவின் பல பகுதிகளில் தற்போதைய வெப்பநிலை மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இந்த கடுமையான வெப்பம் நம் அனைவருக்கும் சவாலானது" என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், இதிலிருந்து தப்பிக்க அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
• பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எப்போதும் தங்களுடன் குடிநீரைக் கொண்டு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
• தாகத்தோடு இருக்கும் மற்றவர்களுக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து உதவுங்கள். இந்த வெயில் காலத்தில் நாம் காட்டும் இத்தகைய சிறு கருணை மற்றும் மனிதநேயம் பலருக்குப் பேருதவியாக இருக்கும்.
37
வெப்பச் சோர்வின் அறிகுறிகளைக் கவனியுங்கள்!
அதிகப்படியான வெயிலினால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக் கண்டறிந்து உடனடியாகச் செயல்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
• அறிகுறிகள்: தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் அதீத சோர்வு போன்ற உடல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
• உடனடி உதவி: உங்களைச் சுற்றியுள்ள எவரேனும் பலவீனமாகவோ, வழக்கத்திற்கு மாறாக உடல்நலக் குறைபாடாகவோ உணர்ந்தாலோ அல்லது கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டாலோ, அவர்களை உடனே நிழலான அல்லது குளிர்ச்சியான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்குத் தண்ணீர் அல்லது ஓஆர்எஸ் (ORS) மின்பகுபொருள் கரைசலை உடனே வழங்க வேண்டும்.
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த அதீத வெப்ப அலையினால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். எனவே, ஆரம்பக்கட்ட எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. அது ஆபத்தாக முடிவதுடன் பக்கவாதம் (Heatstroke) ஏற்படவும் வழிவகுக்கும்.
57
அன்புக்குரியவர்களின் நலன் விசாரியுங்கள்
இந்தக் கடினமான கோடை காலத்தில், நம் குடும்பத்தினரையும், முதியவர்களையும் கவனிப்பது நம் கடமையாகும். முடிந்த போதெல்லாம் உங்கள் வயதான பெற்றோர்கள், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களைத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரியுங்கள். அவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வதோடு, நண்பகல் வேளையில் (Peak Hours) அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும், நல்ல ஓய்வெடுக்கவும் அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.
67
வாயில்லா ஜீவன்கள் மீது காட்டும் கருணை
மனிதர்களைப் போலவே வெயிலின் கொடுமையால் விலங்குகளும் பறவைகளும் தவிக்கின்றன. "இந்தத் தருணத்தில் நம்மைச் சுற்றியுள்ள பறவைகளையும் விலங்குகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்று உருகிய பிரதமர், பொதுமக்கள் தங்கள் வீடுகளின் பால்கனி, மொட்டை மாடி, கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தாகத்தில் தவிக்கும் ஒரு பறவைக்கு அந்தத் தண்ணீர் உயிர்காக்கும் மருந்தாக அமையலாம்.
77
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) எச்சரிக்கை
இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சத்தீஸ்கர், கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. மேலும் உத்தராகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்குக் கடும் வெப்ப அலை தொடரும் என்பதால் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.