உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இந்த மேக வெடிப்பு நிகழ்ந்தது. இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.
"உத்தரகாசியின் தராலியில் ஏற்பட்ட இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருக்கப் பிரார்த்திக்கிறேன்," என்று பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
நிலைமை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநில அரசின் மேற்பார்வையில், நிவாரணம் மற்றும் மீட்புக் குழுக்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன என்றும், மக்களுக்கு உதவி செய்வதில் எந்தக் குறையும் வைக்கப்படாது என்றும் உறுதியளித்தார்.