நாடாளுமன்றத்தில் பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியை நீக்கும் மசோதா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியை நீக்கும் மசோதா உட்பட 14 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவும் அடங்கும்.
பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால், அவர்கள் பதவியை இழக்க நேரிடும் வகையில் 130-வது திருத்த மசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
25
அமித் ஷா பேட்டி
இந்த நிலையில், இந்த மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் உறுதியாக கூறினார். "இது நிறைவேற்றப்படும் என நான் உறுதியாக கூறுகிறேன். காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் நல்லொழுக்கம் மற்றும் நீதிநெறிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் பலர் உள்ளனர். எனவே எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
35
பிரதமர் மோடிக்கு கூட பொருந்தும்
மேலும் அவர் கூறுகையில், "இந்த மசோதா நிறைவேறாத சூழலில், அதனை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்தோம். அரசு ஏற்கனவே இதனை தீர்மானித்திருந்தது. இதன்படி, மக்களவையின் 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையின் 10 உறுப்பினர்கள் என இரு அவைகளை சேர்ந்த மொத்தம் 31 உறுப்பினர்கள் இந்த கூட்டுக்குழுவில் இடம்பெறுவார்கள்," என்று அமித் ஷா தெரிவித்தார்.
"ஒரு முதல்-அமைச்சரோ, பிரதமரோ அல்லது எந்தவொரு தலைவரோ சிறையில் இருந்து கொண்டு நாட்டை வழிநடத்த முடியுமா? நம்முடைய ஜனநாயகத்தின் மாண்புக்கு இது ஏற்ற ஒன்றா?" என ஒட்டுமொத்த நாட்டையும், எதிர்க்கட்சியையும் பார்த்து கேட்க விரும்புவதாக அமித் ஷா கூறினார். இந்த அரசியல் சாசன திருத்தம் பிரதமர் மோடிக்கு கூட பொருந்தும் என அவர் கூறினார். "அவர் ஒருவேளை சிறைக்கு சென்றால், அவரும் கூட பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார்," என அமித் ஷா தெரிவித்தார்.
55
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2014-ம் ஆண்டு முதல் மத்திய அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக விரோத மனப்போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், பதவியிலுள்ள முதல்-அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த மசோதா அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தப்படலாம் என எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.