
இந்தியாவில் நடைபெறவிருக்கும் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நெஞ்சார்ந்த வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இந்தியாவில் சமூகநீதியை நிலைநிறுத்த வழிவகை செய்யும் மிக முக்கியமான நடவடிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட கால நிலைப்பாடு. இதற்காக 1998-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தொடர் முயற்சிகளை பா.ம.க மேற்கொண்டு வந்துள்ளது. அக்கட்சியின் தொடர் கோரிக்கையை ஏற்று, 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி ஒப்புக்கொண்டபோதும், குஜராத் நிலநடுக்கம் காரணமாக அது சாத்தியமாகாமல் போனதை ராமதாஸ் நினைவு கூர்ந்தார்.
மேலும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, 2008-ஆம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம், பா.ம.கவைச் சேர்ந்த அப்போதைய மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ் 140-க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திடப்பட்ட கோரிக்கை மனுவை அளித்தார். இதன் விளைவாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மன்மோகன்சிங் அரசு ஒப்புக்கொண்டாலும், பின்னர் அந்த முடிவு செயல்படுத்தப்படாமல் சமூக, பொருளாதார, கல்வி, சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியிடமும் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று தான் நேரில் வலியுறுத்தியதாகவும், மூன்று முறை கடிதங்கள் எழுதியதாகவும் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பலமுறை இந்த கோரிக்கையை வலியுறுத்திப் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பா.ம.கவின் தொடர் முயற்சியால் கடந்த மூன்று முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது கடைசி நேரத்தில் நழுவிப் போன நிலையில், தற்போது மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் 30 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பா.ம.க சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாகத் தொடங்க வேண்டும் என்றும், அதன் மூலம் அனைவருக்கும் முழுமையான சமூக நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பு மேலோட்டமானதாக இருக்கக்கூடும் என்பதாலும், தமிழ்நாட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க கூடுதல் புள்ளிவிவரங்கள் தேவை என்பதாலும், தமிழக அரசு 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் கீழ் மக்களின் சாதி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய தனியாக சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.