ஒரு மிகப்பெரிய கோவிட் அலையை இந்தியா இனி எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், சர்வதேச பயணங்கள் அதிகரித்து வரும் சூழலில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த கொரோனா வைரஸ், தற்போது SARS-CoV-2 BA.3.2 என்ற புதிய உருமாறிய வடிவில் மீண்டும் உலக நாடுகளை எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதால், சர்வதேச சுகாதார நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்த BA.3.2 மாறுபாடு முதன்முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இடையில் இதன் தாக்கம் குறைந்திருந்தாலும், தற்போது 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, சர்வதேச பயணிகளுக்கான மரபணு கண்காணிப்புத் திட்டம் மூலம் இந்த வைரஸின் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, அமெரிக்காவின் 29 மாகாணங்களில் இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.
24
தடுப்பூசிகளை ஏமாற்றுமா?
இந்த புதிய மாறுபாட்டின் மிக முக்கியமான கவலை அதன் ஸ்பைக் புரதத்தில் ஏற்பட்டுள்ள சுமார் 75 பிறழ்வுகள் ஆகும். வைரஸ் தொடர்ந்து தன்னைத்தானே உருமாற்றிக் கொள்வதால், ஏற்கனவே நாம் போட்டுக்கொண்ட தடுப்பூசிகளின் செயல்திறன் இதில் குறையக்கூடும் என்ற அச்சம் மருத்துவ நிபுணர்களிடையே எழுந்துள்ளது. இந்த பிறழ்வுகள் காரணமாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டிச் செல்லும் திறன் இந்த வைரஸுக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவிற்கு முன்பாகவே ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் உணரப்பட்டது. கடந்த ஆண்டில் ஐரோப்பாவில் பதிவான மொத்த கோவிட் பாதிப்புகளில் சுமார் 35% இந்த BA.3.2 வகையைச் சேர்ந்தவை எனத் தரவுகள் கூறுகின்றன. குறிப்பாக டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பாதிப்புகள் வேகமாக அதிகரித்தன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே தென்பட்டது ஒரு நிம்மதியான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
34
இந்தியா கவலைப்பட வேண்டுமா?
இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது இந்த புதிய மாறுபாட்டினால் பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றே தொற்றுநோயியல் நிபுவணர்கள் கருதுகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ' 'இந்தியாவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக BA.3.2 பாதிப்புகள் பெரிய அளவில் பதிவாகவில்லை. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஏற்கனவே தடுப்பூசி பெற்றுள்ளனர். பலருக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தற்போதைய அறிகுறிகள் சாதாரண சளி மற்றும் காய்ச்சலைப் போலவே இருப்பதால், மக்கள் பீதியடையத் தேவையில்லை.
முன்பு இருந்தது போன்ற ஒரு மிகப்பெரிய கோவிட் அலையை இந்தியா இனி எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், சர்வதேச பயணங்கள் அதிகரித்து வரும் சூழலில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. வைரஸ் உருமாறினாலும், அடிப்படை சுகாதார முறைகளே அதற்கான சிறந்த தீர்வு.