தினமும் குளிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம். நம்மில் பலரும் வீட்டில் ஒரே சோப்பைத்தான் குடும்பமாகப் பயன்படுத்துவோம். ஆனால், இது சரியான பழக்கம்தானா? நிபுணர்கள் சொல்வதைக் கேட்போம். சோப்பில் உள்ள கெமிக்கல்கள் கிருமிகளை அழித்துவிடும். ஆனால், சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற தோல் நோய்கள் யாருக்காவது இருந்தால், அதே சோப்பை மற்றவர்கள் பயன்படுத்துவது ஆபத்து. ஈரமான சோப்பில் கிருமிகள் சிறிது நேரம் உயிரோடு இருக்கும்.
சோப்பை ஷேர் செய்யவே கூடாது
ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு வகை. எண்ணெய்ப் பசை சருமம், வறண்ட சருமம், சென்சிடிவ் சருமம் என அவரவர் தேவைக்கேற்ப சோப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. பெரியவர்கள் சோப் அவர்களுக்கு அலர்ஜி, தடிப்புகளை ஏற்படுத்தலாம். இதற்கு மாற்றாக, சோப்புக்குப் பதில் பாடி வாஷ் அல்லது ஷவர் ஜெல் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சோப்பைப் பயன்படுத்தினால், அதை ஈரம் இல்லாமல் உலர்வாக வைப்பதும், சோப் டப்பாவை சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். தோல் நோய்த்தொற்று உள்ளவர்கள் சோப்பை ஷேர் செய்யவே கூடாது.