Chettinad Mushroom Briyani ; "செட்டிநாடு காளான் பிரியாணி" - வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் வாங்க!

First Published Sep 10, 2022, 5:03 PM IST

செட்டிநாடு காளான் பிரியாணி வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என இந்தப் பதிவில் காணலாம்.
 

செட்டிநாட்டு உணவுகளானது தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் மந்திர கலவையாகும். தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இவற்றை ஒரு சிறந்த சமையல் படைப்பாக ஆக்குகின்றன.

செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரம் மற்றும் தனித்துவமான சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்துள்ளது.

இப்போது, செட்டிநாடு காளான் பிரியாணி வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என இந்தப் பதிவில் காணலாம்.
 

தேவையான பொருட்கள்

அரை கிலோ காளான்

2 கப் பாசுமதி அரிசி

ஒரு நறுக்கிய வெங்காயம்

2 தக்காளி நறுக்கியது

2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

கால் கப் கொத்தமல்லி நறுக்கியது

கால் கப் புதினா நறுக்கியது

3 பச்சை மிளகாய் நறுக்கியது

3 ஸ்பூன் எண்ணெய்

3 ஸ்பூன் நெய்

அரை கப் தேங்காய் பால்

2 ஸ்பூன் தயிர்

2 ஸ்பூன் மிளகாய் தூள்

2 ஸ்பூன் மல்லி தூள்

அரை ஸ்பூன் சோம்பு தூள்

கால் ஸ்பூன் மஞ்சள் தூள்

3 கப் தண்ணீர்

தேவையான அளவு உப்பு

தாளிக்க தேவையான பொருட்கள்

ஒரு பிரியாணி இலை

மூன்று ஏலக்காய்

இரண்டு பட்டை இலவங்கம்

ஐந்து கிராம்பு
 

செய்முறை

முதலில் காளானை நன்றாக கழுவ வேண்டும். பின் அதனை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், பாசுமதி அரிசியை நீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி அது காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் இலவங்கம் ஆகியவற்றையெல்லாம் போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர், அதில் நறுகிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும். அதோடு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா உள்ளிட்டவற்றையும் சேர்த்து, வதக்க வேண்டும். பின்னர் அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி ஆகியவையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி நன்கு வதக்கியதும், காளானை போட்டு பிரட்ட வேண்டும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.

அதே வேளையின், மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஊறவைத்த பாசுமதி அரிசியைக் கழுவி போட்டு, அந்த கிரேவியை ஊற்றி அதனுடன் 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்ட பின் இறக்க வேண்டும். இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி தயார்.
 

click me!