நீலகிரி மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதே நேரத்தில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புலிகள் இறப்பதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்த இரு வாரத்தில் மட்டும் 5 புலிகள் இறந்துள்ளன. இந்நிலையில் உதகை அருகே உள்ள எமரால்டு கிராமம் அருகில் உள்ள அவலாஞ்சி அணை, தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்காலில் மர்மமான முறையில் இரண்டு ஆண் புலிகள் உடல்களில் எந்த வித காயங்களும் இல்லாமல் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, புலிகள் இறந்து கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் மாடு ஒன்று இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். இந்த இரண்டு புலிகளும் விஷம் குடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் யாருடைய பசுமாடு இறந்தது என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் எமரால்டு பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் (58) என்பவரது பசுமாடு காணாமல் போனது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் சேகரின் பசுமாடு புலி தாக்கி இறந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் இறந்த பசு மாட்டின் உடலில் விஷம் கலந்து அந்த பகுதியில் போட்டுள்ளார். அதனை சாப்பிட்ட புலிகள் உயிரிழந்தது தெரியவந்தது. சேகரின் மாட்டை புலி அடித்துக் கொன்றதால் பழிக்குப் பழியாக புலியை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.