
இந்தியாவின் பிரபல தொழிலதிபராக மீரா குல்கர்னி இருக்கிறார். கிட்டத்தட்ட 10,000 கோடி மதிப்புடைய வணிக சாம்ராஜ்யத்தின் ராணியாக திகழ்கிறார். ஆனால் மீரா குல்கர்னியின் தொழில் வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. பல்வேறு சோதனைகள் கஷ்டங்களும் நிறைந்தது. அவரின் வெற்றிகரமான தொழில் வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
20 வயதில் திருமணம் செய்து கொண்ட மீராவுக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. தனது கணவரின் குடிப்பழக்கத்தால் தினம் தினம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். பெரும் அழுத்தத்தை எதிர்கொண்ட அவர், ஒருக்கட்டத்தில் கணவரை பிரிந்து தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் தனது பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்தார். ஆனால் தனக்கும் தனது இரண்டு குழந்தைகளுக்கும் பிரகாசமான எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அப்போது தான் மீராவின் வாழ்க்கையில் மற்றொரு சோகம் ஏற்பட்டது. தனது 28 வயதிற்குள் தனது பெற்றோர் இருவரையும் இழந்தாள். இதனால் தனது இரண்டு பிள்ளைகளையும் தனியாக வளர்க்க வேண்டி இருந்தது. சிங்கிள் பேரண்டா தனது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்தார். தனது மகளை நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்தார்.
தனது 45-வது வயதில் தனது வாழ்க்கையை மாற்றும் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார் மீரா. ஆம்.. மெழுகுவர்த்திகள் மற்றும் கையால் செய்யப்பட்ட சோப்புகளை உருவாக்க தொடங்கினார். அவரின் இந்த பொழுதுபோக்கு பின்னர் வணிக யோசனையாக வளர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் Forest Essentials என்ற நிறுவனத்தை தொடங்கினார் மீரா குல்கர்னி.
வெறும் ரூ.2 லட்சமும், ஒரு சிறிய அறையில் இரண்டு பணியாளர்களும் இருந்த நிலையில், மீராவின் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் பலன் கிடைக்க தொடங்கியது. இயற்கை பொருட்களை வைத்து ஆயுர்வேதத்தின் சாரத்துடன் தனது சோப்புகளை தயாரித்தார். இதை தொடர்ந்து அவரின் நிறுவனம் பல கோடி வணிகமாக வளர்ந்தது, இந்தியா முழுவதும் 28 நகரங்களுக்கு விரிவடைந்தது.
2008 ஆம் ஆண்டில் ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் Estee lauder நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தபோது ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்தது. ஹயாட் மற்றும் தாஜ் போன்ற புகழ்பெற்ற ஹோட்டல்களில் ஃபார்ஸ்ட் எசென்ஷியல்ஸ் நிறுவனத்தின் சோப்புகள் பயன்படுத்தப்பட்டது. ஃபார்ச்சூன் பத்திரிகையில் "இந்தியாவிற்கான வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில்" ஒருவராக அவர் மீண்டும் மீண்டும் பெயரிடப்பட்டார். அவரின் சொத்து மதிப்பு ரூ.1,290 கோடியாக என்று மதிப்பிடப்பட்டுள்ளது..
Forest Essentials நிறுவனத்தின் தயாரிப்புகள் இப்போது இந்தியாவில் 110 க்கும் மேற்பட்ட கடைகள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிராண்ட் தாஜ் மற்றும் ஹயாட் போன்ற ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள உயர்நிலை ஸ்பாக்களிலும் கிடைக்கிறது. அவரின் நிறுவனம் 2020-ம் நிதியாண்டில் ரூ. 253 கோடி, 2021-ம் நிதியாண்டில் ரூ. 210 கோடி வருவாயுடன் கணிசமான நிதி வெற்றியை அடைகிறது. மீரா குல்கர்னியின் தொழில் பயணம், கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி உறுதி என்பதை நிரூபித்துள்ளது.