2026 FIFA உலகக் கோப்பையில் ஸ்பெயினிடம் தோற்று போர்ச்சுகல் வெளியேறியதால், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது.
கால்பந்து உலகின் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அற்புதமான உலகக் கோப்பை பயணம் சோகத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. 2026 FIFA உலகக் கோப்பையின் ப்ரீ-குவாட்டர் ஃபைனலில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் தோல்வியடைந்தது. இதனால், அந்த அணி தொடரிலிருந்து வெளியேறியது. தனது 41 வயதில் கடைசி உலகக் கோப்பையில் விளையாடிய ரொனால்டோ, தோல்விக்குப் பிறகு மைதானத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
24
மனதை உருக்கிய தருணங்கள்
போட்டி முடிந்ததும், ரொனால்டோ சிறிது நேரம் மைதானத்தில் அசைவற்று நின்றார். தனது கடைசி உலகக் கோப்பை இதுதான் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல் தவித்த அவர், ஸ்பெயினின் இளம் வீரரான லாமின் யமாலை கட்டிப்பிடித்து ஆறுதல் தேடினார். எதிரணி வீரர்களுக்கு கை கொடுக்கும்போது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ரொனால்டோ கண்ணீர் சிந்தினார். பின்னர், தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு, தலைகுனிந்தபடி மைதானத்தை விட்டு வெளியேறினார். இதன்மூலம், அவரது 20 ஆண்டுகால உலகக் கோப்பை கனவுப் பயணம் முடிவுக்கு வந்தது.
34
வருத்தமில்லை
இந்தப் போட்டிக்கு முந்தைய நாள், இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாகவும், போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் ரொனால்டோ தெரிவித்திருந்தார். 'கால்பந்தாட்டத்திற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை' என்று அவர் கூறியிருந்தார். இந்தத் தொடரில் மூன்று கோல்களை அடித்து ரொனால்டோ தனது உலகக் கோப்பை பயணத்தை நிறைவு செய்துள்ளார். 2006-ல் அரையிறுதிக்கு முன்னேறியதே, அவரது உலகக் கோப்பை பயணத்தில் சிறந்த மைல்கல்லாக உள்ளது.
தனது கால்பந்து வாழ்க்கையில் பெரும்பாலான கோப்பைகளையும், விருதுகளையும் வென்று குவித்த ரொனால்டோவுக்கு, உலகக் கோப்பை மட்டும் எட்டாக்கனியாகவே இருந்தது. கால்பந்தின் மிகப்பெரிய விருதான உலகக் கோப்பையை வெல்லாமலேயே, அவர் சர்வதேச அரங்கில் இருந்து விடைபெறுகிறார். ஒரு தலைமுறையையே தன் ஆட்டத்தால் கட்டிப்போட்ட இந்த கால்பந்து ஜாம்பவானின் உலகக் கோப்பை பயணம், மறக்க முடியாத தருணங்களுடன் முடிவுக்கு வந்துள்ளது. பிரேசிலை தொடர்ந்து போர்ச்சுகல் வெளியேறியதால் கால்பந்து ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.