பெத்த அப்பனுக்கே தெரியாம என் புள்ள உடலை பொண்டாட்டி அடக்கம் பண்ணிட்டா! சாவில் மர்மம் இருக்கு! கதறும் தந்தை.!

First Published Jun 9, 2023, 1:07 PM IST

சென்னையில் 3 வயது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவியை பிரிந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் செல்வபிரகாசம் (27). இவரது மனைவி லாவண்யா (25). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு  சர்வேஸ்வரன் (3) என்ற மகன் இருந்தான். கணவன் - மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மனைவியின் பராமரிப்பில் சர்வேஸ்வரன் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், சென்னையில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன் செல்வபிரகாசம், கெருகம்பாக்கத்தில் இருக்கும் லாவண்யா வீட்டிற்கு தனது குழந்தையை பார்க்க சென்றார். அப்பொது, வீட்டில் லாவண்யா இல்லை. ஆனால் அக்கம் பக்கத்தினர் செல்வபிரகாசனிடம், மகன் சர்வேஸ்வரன் கடந்த 3 தினங்களுக்கு முன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனை சற்றும் எதிர்பாராத செல்வபிரகாசம் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து,குழந்தை இறந்த தகவலை தனக்கு தெரிவிக்காமல் குழந்தையை அடக்கம் செய்துவிட்டதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், வேறு ஒருவருடன் மனைவி பழகி வருவதால் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தை சர்வேஸ்வரன் விளையாடும்போது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மீண்டும் சில தினங்களுக்கு முன்பு மயக்கமடைந்த சர்வேஸ்வரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்து விட்டதும் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!