பொதட்டூர்பேட்டையில், அரசு ஊழியரான கணேசன் என்பவர் பாம்பு கடித்து இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்சூரன்ஸ் பணம் மற்றும் அரசு வேலைக்காக அவரது இரு மகன்களே நண்பர்களுடன் சேர்ந்து கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என்ற இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் ஓட்டுநராகவும் வேலை செய்து வந்துள்ளார்.
24
காப்பீட்டு நிறுவனம் புகார்
இந்நிலையில் கடந்த அக்டோபர் 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிரிழந்தார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கணேசன் குடும்பத்தினர் மீது சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது. இதையடுத்து ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
34
பாம்பை கடிக்க வைத்து கொலை
அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கணேசன் இறந்தால் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலை கிடைக்கும் என இரு மகன்களும் முடிவு செய்து பாம்பை கடிக்க வைத்து தந்தையை கொன்றது தெரியவந்தது. இதற்காக இவர்களது நண்பர்கள் பாலாஜி (28), பிரசாந்த் (35), நவீன் குமார் (28) தினகரன் (28) ஆகியோருடன் உதவியது தெரியவந்தது.
அதாவது கணேசனின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து மோகன்ராஜ், ஹரிகரன் உள்ளிட்ட 6 பேரையம் போலீசார் கைது செய்தனர். இன்சூரன்ஸ் பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து பெற்ற மகன்களே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.