ஹாலிவுட் படத்தை மிஞ்சிய கொலை.! பட்டப்பகலில் காரை நேருக்கு நேர் மோதவிட்டு ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை.!

First Published Mar 11, 2023, 9:11 AM IST

திருவாரூர் அருகே கொலை வழக்கில் நீதிமன்றத்துக்கு ஆஜராகவிட்டு காரில் சென்றுக் கொண்டிருந்த ரவுடி 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (32).  இவர் வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் மீது  கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார். 

இந்நிலையில், வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக ராஜ்குமார் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மாருவி ஸ்விப்ட் காரில்  கமலாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி அதிவேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார், இவர்கள் வந்த கார் மீது நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது. 

இதனால், காரின் பின்பக்க கதவு டோர் லாக் ஆனதால் பின்னால் அமர்ந்த அமர்ந்திருந்தவர்கள் வெளியே வர முடியவில்லை. இதனையடுத்து, பயங்கர ஆயுதங்களுடன் ஸ்கார்பியோ காரில் இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரை வெட்ட முயன்றது. உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

click me!