என்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்கிட்டாரே.. என் வாழ்க்கையை நாசம் செஞ்சவங்கள தூக்குல போடுங்க.. ஜெகன் மனைவி கதறல்

First Published Mar 24, 2023, 11:15 AM IST

எனக்கு திருமணமாகி இன்னும் 2 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் இப்படி ஆவிட்டது என ஆணவக்கொலை செய்யப்பட்ட ஜெகன் மனைவி கதறிய படி கூறியுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களது எதிர்ப்பையும் மீறி ஜெகன், சரண்யா இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். 

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்நிலையில், ஆணவக்கொலை செய்யப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா கதறிய படி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எனக்கு திருமணமாகி இன்னும் 2 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் இப்படி ஆவிட்டது. எப்போதெல்லாம் எனக்கு வீடு ஞாபகம் வருகிறதோ அப்போதெல்லாம் தனிமையில் நான் அழும் போது என்னை சமாதானப்படுத்தி என் கணவரும் கூடவே அழுவார்.

அவர் என்னை ராணி மாதிரி வைத்து பார்த்து கொண்டார். அப்படிப்பட்டவரை அநியாயமாக ஈவு இரக்கமில்லாமல் கொன்று விட்டார்களே. அதற்கு என்னை கொலை செய்திருக்கலாமே. எனது வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள். இந்த கொலையில் தொடர்புடைய எனது தந்தை உள்பட அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என சரண்யா ஆவேசமாக கூறினார். 

click me!