எங்க அக்காவுடனான தொடர்பை கைவிடு.. கள்ளக்காதலை கண்டித்த நண்பன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

First Published Mar 22, 2023, 3:05 PM IST

கோவையில் கள்ளக்காதலை கண்டித்ததால் இளைஞர் கத்தியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் வேடப்பட்டி நம்பியழகம் பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெகன்ராஜ்(33). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பரான மதன்ராஜ்(32) என்பவருக்கும் ஜெகன்ராஜ் அக்காவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெகன்ராஜுக்கும் மதன்ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் ஜெகன்ராஜ் குடிபோதையில் மதன்ராஜ் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மதன்ராஜ் வீட்டில் இருந்து கட்டையை எடுத்து வந்து ஜெகன்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். 

மேலும் ஆத்திரம் அடங்காததால் ஜெகன்ராஜை கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். 
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து கொலை மறைப்பதற்காக ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து அதில் ஜெகன்ராஜின் உடலை ஏற்றிக் கொண்டு வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் இருக்கும் மயானத்துக்கு சென்றார். ஆனால் அப்பகுதி பொதுமக்களிடம் மதன்ராஜ் சிக்கிக்கொண்டார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  மதன்ராஜியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!