அப்போ பேய் படம்... இப்போ காதல் படம் - மீண்டும் சுந்தர் சி உடன் கூட்டணி அமைத்த உதயநிதி

First Published Sep 5, 2022, 2:29 PM IST

Udhayanidhi Stalin : சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 படத்தை கடந்தாண்டு வெளியிட்ட உதயநிதி தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள காதல் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றி உள்ளார்.

நடிகரும், அரசியல்வாதியுமான் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன்மூலம் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த ஓராண்டில் ரிலீசான பெரும்பாலான படங்களை இவரின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது. தற்போது வாரத்திற்கு ஒரு படத்தை வெளியிடும் அளவிற்கு இவர்கள் கைவசம் படங்கள் குவிந்து வருகின்றன.

கடந்த மாதம் வெளியான அமீர்கானின் லால் சிங் சத்தா, அருள்நிதி நடித்த டைரி, சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா போன்ற படங்களை உதயநிதி தான் வெளியிட்டார். அதேபோல் இந்த மாதம் வருகிற 8-ந் தேதி ஆர்யாவின் டைரி, 15-ந் தேதி சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை வெளியிடுகின்றனர். இதுதவிர பொன்னியின் செல்வனையும் இவர்கள் ரிலீஸ் செய்ய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... நயன்தாரா, அஜித், ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர் - நடிகைகள் உதவியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா

இவ்வாறு பிசியான நிறுவனமாக இருக்கும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் தற்போது மேலும் ஒரு படத்தை கைப்பற்றி உள்ளது. அதன்படி சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படமான காஃபி வித் காதல் திரைப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான பேய் படமான அரண்மனை 3-யை உதயநிதி தான் வெளியிட்டார். அப்படம் விமர்சன ரீதியாக கடும் சரிவை சந்தித்தாலும், தனது கெரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக அது இருந்ததாக இயக்குனர் சுந்தர் சி-யே ஒரு மேடையில் கூறி இருந்தார். இதற்கு ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த விதம் தான் காரணம் எனவும் பாராட்டி இருந்தார்.

இதையும் படியுங்கள்... லேட்டா கிடைச்சாலும் .. பெஸ்டா கிடைத்தது..விருது குறித்து சித்தார்த் உருக்கம்

click me!