
சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களின் சம்பளம் தான் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் ஹிட் கொடுத்தாலே லட்சத்தில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் கூட தனக்கு 5 கோடி வேண்டும், 10 கோடி வேண்டும் என கேட்டு வருகிறார்கள். அப்படி இருக்கையில் நட்சத்திர நடிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும், அவர்கள் படத்துக்கு படம் 50 கோடி சம்பளத்தை அதிகரித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார். இவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.275 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஜன நாயகன் படத்திற்காக தான் அவருக்கு இந்த மிகப்பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே 275 கோடி சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ விஜய் தான். அதேபோல் இந்திய அளவிலும் இவ்வளவு பெரிய தொகையை எந்த நடிகரும் சம்பளமாக வாங்கியதில்லை. இவ்வளவு சம்பளம் வாங்கும் விஜய், இப்படத்தோடு சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 என இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. அதேபோல் ஜெயிலர் 2 திரைப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இதில் கூலி படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.250 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித், இந்த ஆண்டு மட்டும் இரண்டு படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்தார். இதில் பிப்ரவரி மாதம் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன விடாமுயற்சி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் அஜித். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அஜித்குமார். இப்படத்தில் அஜித்துக்கு ரூ.180 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார் அஜித்.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய சம்பளத்தை அதிகரித்துவிட்டார். இதையடுத்து அவர் நடித்த இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாம். ஆனால் அப்படத்தின் தோல்விக்கு பின்னர் அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த தக் லைஃப் படமும் பிளாப் ஆனது. அது அவரின் சொந்த தயாரிப்பு படம் என்பதால் அதில் ஒத்த ரூபாய் கூட அவருக்கு சம்பளமாக கிடைக்கவில்லை. அடுத்ததாக அன்பறிவு இயக்கும் படம், கல்கி 2 மற்றும் இந்தியன் 3 போன்ற படங்களை தன்னுடைய கைவசம் வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற சீனியர் நடிகர்களைக் காட்டிலும் சிவகார்த்திகேயன் தான் முன்னிலையில் உள்ளார். அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இதனால் அடுத்ததாக அவர் நடித்து வரும் பராசக்தி படத்திற்காக அவருக்கு ரூ.75 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இதையடுத்து குட் நைட் பட இயக்குனர் விநாயக் உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.கே. இதுதவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.