தமிழ் சினிமாவில் தத்துவ பாடல்களுக்கு தனி அடையாளம் அமைத்து கொடுத்த கவிஞர்களில் முதன்மையானவர் கவிஞர் கண்ணதாசன். மனித வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள், காதல் உணர்வுகள், மன வலிகள், உறவுகளின் நுணுக்கங்கள் என பல்வேறு அனுபவங்களை எளிமையான சொற்களில் ஆழமாக வெளிப்படுத்தியவர். அதனால் தான், அவரது பாடல்கள் காலத்தை கடந்தும் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றது.
26
புதிய உச்சம் தொட்ட பாடல்கள்:
1950-களில் தொடங்கி 1970களின் இறுதி வரை, தமிழ் சினிமாவில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ஒரு புதிய உயரத்தை தொட்டன. குறிப்பாக எம்.எஸ்.விஸ்வநாதனுடன் அவர் இணைந்த தருணங்கள் இசை வரலாற்றில் பொற்காலமாகவே பார்க்கப்படுகின்றன. “இந்த கூட்டணி சேர்ந்தால் பாடல்கள் அனைத்தும் ஹிட் என நம்பினார் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள்”. இருவருக்கும் இடையே இருந்த புரிதலும், கலை உணர்வும் அந்த அளவிற்கு வலிமையானது. ஆனால், அந்த நெருக்கத்துடன் சேர்ந்து சில நேரங்களில் இருவருக்கும் சண்டை சர்ச்சைகள் வருவதும் ஓய்வதும் வழக்கமான ஒன்றே.
36
சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்
அப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான் 1962ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சம் ஒரு ஆலயம்' படத்திற்கு பாடல் எழுதும் போது நடந்துள்ளது. இந்த படத்தை C. V. ஸ்ரீதர் இயக்கியிருந்தார். கதையின் முக்கியமான கட்டத்தில் வரும் ஒரு உணர்ச்சி பூர்வமான காட்சிக்காக ஒரு பாடல் தேவைப்பட்டது. அந்த காட்சியில், நோயால் பாதிக்கப்பட்ட கணவன் தனது மனைவியிடம், “நான் இல்லாதபின் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கூறும் போது... மன வேதனையை அந்த பெண் வெளிப்படுத்தும் படி அந்த பாடல் இருக்க வேண்டும்.
46
திட்டிய எம்.எஸ்.வி
இந்த பாடலுக்கான பணிகளை கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.வி இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி வேலை செய்தனர். ஆனால் அப்போது கண்ணதாசனுக்கு இருந்த மது பழக்கம் காரணமாக, அவர் முதல் நாளில் வேலைக்கு முழுமையாக ஈடுபடாமல் குடித்து விட்டு தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதை எம்.எஸ்.வி பொறுத்துக்கொண்டார். ஆனால் அடுத்த நாளும் அதே நிலை தொடர்ந்தபோது, அவர் கடும் கோபம் கொண்டதாக கூறப்படுகிறது.
56
சொன்னது நீதானா விசு?:
கோபத்தில் கண்ணதாசன் இருக்கும் அறைக்கு சென்று, “இப்படி நடந்தால் வேலை எப்படி முடியும்?” என கண்ணதாசனை கொஞ்சம் கடுமையாக குடிகாரன் என திட்டியுள்ளார். சில நிமிடம் கழித்து அறை கதவைத் திறந்து வெளியே வந்த கண்ணதாசன், எம்.எஸ்.வி கூறிய வார்த்தைகளை அமைதியாக கேட்டாரா என்பது தெரியாமல் இருந்தாலும், கோபத்தை வெளிக்காட்டாமல் திடீரென “சொன்னது நீதானா விசு?” என்று கேட்டுள்ளார். அதில் இருந்து அவர் உடனே ஒரு பல்லவியை உருவாக்கினார். “சொன்னது நீதானா, சொல் சொல் என் உயிரே...” என்ற அந்த வரி அங்கேயே பிறந்தது.
66
எந்த சூழலிலும் பாடல் எழுதும் கவிஞன்:
அந்த ஒரு வரியை அடிப்படையாக வைத்து, மிகக் குறுகிய நேரத்தில் முழு பாடலையும் எழுதி முடித்தார் கண்ணதாசன். எம்.எஸ்.வி அதற்கு இசை அமைத்தார். பின்னர் அந்த பாடல் திரைப்படத்தில் இடம்பெற்று, ரசிகர்களின் மனதை உருக்கியது. இந்த பாடல் சாருகேசி ராகத்தில் அமைந்தது. அதனால் அதற்கு ஒரு தனி உணர்ச்சி ஆழம் கிடைத்தது. “சொன்னது நீதானா” என்ற இந்த பாடல், ஒரு சாதாரண பாடல் அல்ல; அது ஒரு உணர்ச்சி வெளிப்பாடு. கண்ணதாசனின் மனநிலையும், அந்த நேரத்தில் ஏற்பட்ட சூழலும் இணைந்து உருவாக்கிய ஒரு கலைப் படைப்பு. இந்த சம்பவம், ஒரு கலைஞன் எந்த சூழலிலும் தனது திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.