கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து வதந்தி குறித்த விவகாரம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து கணவன் - மனைவி இருவருமே அமைதி காத்து வருவதால் இந்த வதந்திகள், விவாகரத்துக்கு சமந்தா ஜீவனாம்சம் கேட்டது வரை சென்று விட்டது என கூறலாம்.
மேலும் சமந்தா ஹிந்தியில் நடித்த 'தி பேமிலி மேன் 2 ' வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, சில பாலிவுட் வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை தட்டியதால், மும்பை செல்ல இவர் திட்டமிட்டுள்ளதாகவும், நாக சைதன்யா அவருடைய தந்தையுடன் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.
அதே போல் சமந்தா கடந்த மாதம் அவருடைய மாமனார் நாகார்ஜுனாவின் (Nagarjuna ) பிறந்தநாள் பார்ட்டியில் மிஸ் ஆனது, இவர்கள் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதாக வெளியான சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாகவே இருந்தது.
சமந்தா சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியா தர்ஷன், மற்றும் த்ரிஷா கலந்து கொண்ட பார்ட்டியில் நாக சைதன்யா மிஸ் ஆனார். திருப்பதி கோவிலுக்கு வந்த இவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், மிகவும் காட்டமாக புத்தி இருக்கா என கேட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமந்தா - சைதன்யா இடையே ஏற்பட்ட விரிசலை சரி செய்வதற்காக அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாகவே கூறப்பட்டது.
இந்நிலையில் முதல் முறையாக சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, விவாகரத்து குறித்த வதந்திக்கு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதில் அவர் கூறியுள்ளதாவது, நான் சிறிய வயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் கடைபிடித்து வருகிறேன்.
சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி பரபரப்பாக பேசப்படும், முந்தையநாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இதுகுறித்து கவலைப்படுவதே நிறுத்தி விட்டேன்’ என்று கூறியுள்ளார்.