நடிகர் சூர்யா நடிப்பில், அண்மையில் நேரடியாக ஓடிடியில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தபோதும், மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’ (Etharkkum Thunindhavan). சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகனும், வில்லனாக வினய்யும் நடித்துள்ளார். மேலும் சூரி, சத்யராஜ், திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டி.இமான் இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து பாடி உள்ளதாகவும், இப்பாடலின் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.