
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அஜய் ஞானமுத்து, கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். புதுவிதமான பேய் படமாக அதை இயக்கி முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார் அஜய். இதையடுத்து இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய், கடந்த ஆண்டு டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்நிலையில், டிமான்டி காலனி படம் ரிலீஸ் ஆகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் அஜய் ஞானமுத்து.
அந்த அறிக்கையில், “அன்பு நண்பர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும், என் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் நன்றி தெரிவிக்கவும் சரியான நேரம் இது. பத்து வருடங்களுக்கு முன்னாள் தமிழ்த்திரையுலகில் பல இளம் தொழில்நுட்ப கலைஞர்களுடன் எனது இயக்குநர் பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது எனது முதல் படம் 'டிமான்டி காலனி' பத்து வருடங்கள் நிறைவு செய்திருப்பது உணர்வுப்பூர்வமான தருணமாக உள்ளது. நாம் விரும்பியதை செய்யும் போது அதற்கான ஆதரவும் அன்பும் தொடர்ந்து கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
என்னுடைய முதல் படமான 'டிமான்டி காலனி' நான் இயக்குநராகப் பணிபுரிவதற்கு முந்தையகால கட்டத்தின் பிரதிபலிப்பாகும். ஏனெனில் 'ஹாரர் படங்கள் திரையரங்குகளில் ஒரு பார்வையாளராக எனக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. 'தி எக்ஸார்சிஸ்ட், 'தி ஓமன் மற்றும் 'தி கன்ஜூரிங்' போன்ற கிளாசிக் ஹாரர் படங்கள் எல்லா சினிமா ரசிகர்களுக்கும் என்றென்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இதுபோன்ற படங்களின் தாக்கமே தடைகளைக் கடந்து புதிய உலகத்தை உருவாக்க என்னைத் தூண்டியது. அதில்தான் 'டிமாண்டி காலனி' என்ற எனது ஹாரர் ஜானர் படத்தை உருவாக்கினேன்.
மோகனா மூவிஸ் எம்.கே. தமிழரசு சார், அருள்நிதி சார் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி சார் ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால், 'டிமான்டி காலனி' திரைப்படம் உருவாகி இருக்காது. அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். டிமான்டி காலனி திரைப்படம் ஒரு நினைவாக இல்லாமல் ஒரு புதிய உலகமாக மாறி நிற்பதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
அருள்நிதி சார் 'டிமான்டி காலனி' உலகத்திற்கு தனது ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்பது எனக்கு மிகுந்த உறுதுணையாக உள்ளது. மேலும் தொழில்துறை நண்பர்கள், பத்திரிகை- ஊடக நண்பர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் எனக்குக் கொடுத்து வரும் அன்பு ஒவ்வொரு கட்டத்திலும் தரமான படைப்பை வழங்குவதற்கான பொறுப்பை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த DC வரிசையில் இரண்டு படங்களுக்கும் கிடைத்த மகத்தான வரவேற்பை அடுத்து இதன் மூன்றாவது பாகத்தை எனது குழுவுடன் இணைந்து அனைத்து வகையிலும் தரமாகவும், சிறப்பாகவும் எடுத்து வருகிறோம். இது நிச்சயமாக சினிமா ரசிகர்களுக்கு புதுவகையான சில்லிடும் ஹாரர் அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் அடுத்தகட்ட தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.