
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டது.
இந்த நியமனத்துக்கான அறிவிக்கை அக்டோபர் 16, 2025 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பப் பதிவேற்றம் செய்ய நவம்பர் 10, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின், அவற்றைத் திருத்தம் செய்ய ஒரு முக்கிய அவகாசத்தை TRB வழங்கியுள்ளது.
அரசு உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து, தேர்வு கட்டணத்தைச் செலுத்திய விண்ணப்பதாரர்கள், தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பினால், நவம்பர் 11, 2025 முதல் நவம்பர் 13, 2025 வரை அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பணி அனுபவச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய நவம்பர் 30, 2025 வரை அவகாசம் உள்ளது.
இந்த நவம்பர் 13, 2025 வரை தேர்வர்களின் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கும் என்றும், நவம்பர் 13-க்கு பிறகு மாற்றங்கள் கோரி வரும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் திருத்தம் செய்யும்போது சில முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது:
• அனுமதி: இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
• சமர்ப்பிப்பு உறுதி: விவரங்களைத் திருத்திய பிறகு, கடைசிப் பக்கத்தில் உள்ள "சமர்ப்பி" (Submit) பொத்தானை அழுத்தி மாற்றங்களை உறுதி செய்வது அவசியம். அவ்வாறு உறுதி செய்யாவிட்டால், மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல், முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
• சரிபார்ப்பு: திருத்தம் செய்த பின்னர், Print Preview Page சென்று அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
• மாற்ற முடியாத விவரங்கள்: கைபேசி எண் (Mobile No) மற்றும் மின்னஞ்சல் முகவரி (E-mail ID) ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.
இனம் (Community) அல்லது மாற்றுத்திறனாளிகள் (PWD) போன்ற விவரங்களைத் திருத்தும் போது கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அப்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:
• கூடுதல் கட்டணம் தேவைப்பட்டால்: கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர், தேர்வுக்கான முழு கட்டணத் தொகையினையும் மீண்டும் செலுத்த வேண்டும்.
• குறைந்த கட்டணம் தேவைப்பட்டால்: குறைவாகக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்தின் மீதித் தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.
• பொறுப்பு: கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தபின் வேறு எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதால், விண்ணப்பதாரர்கள் இந்த இறுதி வாய்ப்பை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.