
வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி படிக்க வேண்டும் என்பது பல இந்திய மாணவர்களின் மிகப் பெரிய கனவு. ஆனால், அங்கு ஆகும் பெருந்தொகை செலவுகளை நினைத்து பலரும் பின்வாங்கி விடுகின்றனர். இந்த நிலையில், அயர்லாந்தில் (Ireland) உள்ள ஒரு முன்னணிப் பல்கலைக்கழகம், இந்திய மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெகா கல்வி உதவித்தொகையை (Scholarship) அறிவித்துள்ளது.
அயர்லாந்தின் தேசியக் கல்லூரியான 'நேஷனல் காலேஜ் ஆஃப் அயர்லாந்து' (National College of Ireland - NCI) தனது 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்தச் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கல்வி மாநாட்டில், இந்தியாவிற்கான அயர்லாந்து தூதர் கெவின் கெல்லி முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த உதவித்தொகை மூலம் எந்தெந்தப் படிப்புகளைப் படிக்கலாம்? தகுதிகள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
இந்த 75 லட்ச ரூபாய் கல்வி உதவித்தொகையானது பிரத்தியேகமாக அயர்லாந்தில் முதுகலை (Postgraduate) படிக்கும் இந்திய மாணவர்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பாக, பிசினஸ் (Business), கம்ப்யூட்டிங் (Computing) மற்றும் சைக்காலஜி (Psychology) ஆகிய துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
கல்வி கட்டணக் குறைப்பு (Tuition fee reduction) என்ற அடிப்படையில் இந்த நிதியுதவி அளிக்கப்படும். அதாவது, மாணவர்களின் மதிப்பெண் தகுதி (Merit-based) மற்றும் அவர்களின் பொருளாதாரத் தேவையின் (Need-based) அடிப்படையில் இந்த உதவித்தொகை பிரிக்கப்பட்டு வழங்கப்படும். இதன் மூலம் திறமையான மாணவர்களின் பொருளாதாரச் சுமை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1951-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட NCI கல்லூரி, அயர்லாந்து அரசின் உயர் கல்வி ஆணையத்தின் நிதியுதவியுடன் செயல்படும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியாகும். சுமார் 6,500 மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். டப்ளின் (Dublin) நகரில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி, வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல், தொழில்துறைக்குத் (Industry-aligned) தேவையான நடைமுறைப் பயிற்சிகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.
NCI கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ஜினா க்வின் (Prof Gina Quinn) இதுகுறித்துப் பேசுகையில், "திறமையான இந்திய மாணவர்கள் வேலைவாய்ப்பை மையப்படுத்திய கல்வியைப் பெற இந்த ஸ்காலர்ஷிப் உதவும். அயர்லாந்தின் முன்னணி ஃபைனான்ஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்களுடன் எங்கள் கல்லூரி நேரடித் தொடர்பில் இருப்பதால், படிப்பு முடிந்தவுடன் மாணவர்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பும் கிடைக்கும்" என்று உறுதியளித்துள்ளார்.
சமீபகாலமாக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைத் தாண்டி, தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழல் காரணமாக இந்திய மாணவர்கள் அயர்லாந்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். படிப்பு முடித்த பின் அங்கேயே வேலை தேடுவதற்கான சிறப்பான விசா சலுகைகளும் இருப்பதனால், இந்த NCI கல்லூரியின் ஸ்காலர்ஷிப் வாய்ப்பு, இந்திய மாணவர்களுக்குக் கிடைத்த ஒரு ஜாக்பாட் என்றே கூறலாம்!