உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையால், இந்தியா தனது தங்கச் சேமிப்பை வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்பாக நாட்டுக்குள் கொண்டு வருகிறது. இது எதிர்கால நிதி நெருக்கடிகளுக்கு எதிரான ஒரு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார சூழல் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில், இந்தியா தனது தங்கச் சேமிப்பை பாதுகாப்பான முறையில் நாட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளது. லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான டன் தங்கத்தை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) படிப்படியாக திரும்பப் பெறுகிறது. இது ஒரு சாதாரண நிதி நடவடிக்கை அல்ல. எதிர்கால அசாதாரண சூழ்நிலைகளுக்கு எதிரான ஒரு முக்கிய பாதுகாப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆர்பிஐ வெளியிட்ட சமீபத்திய அரையாண்டு அறிக்கையின் படி (அக்டோபர் 2025 - மார்ச் 2026), இந்தியாவிடம் மொத்தமாக 880.52 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. இதில் சுமார் 77% அல்லது 680 டன் தங்கம் தற்போது இந்தியாவிலேயே பாதுகாக்கப்படுகிறது.
23
வெளிநாட்டிலிருந்த தங்கம் திரும்பியது
மேலும் 197.67 டன் தங்கம் Bank of England மற்றும் BIS அமைப்புகளில் உள்ளது; 2.8 டன் டெபாசிட்களாக உள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வெறும் 6 மாதங்களில் மட்டும் 104.23 டன் தங்கம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2023 மார்ச் வரை நாட்டுக்குள் இருந்த தங்கம் 37% மட்டுமே என்பதால், இந்த மாற்றத்தின் வேகம் கவனிக்கத்தக்கது. இந்த மாற்றத்துக்கு பின்னால் உலக அரசியல் நிகழ்வுகள் முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக ரஷ்யா–உக்ரைன் போர் மற்றும் அதன் பின் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் வெளிநாட்டு நிதிகள் முடக்கப்பட்ட சம்பவங்கள், பல நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்தன. வெளிநாடுகளில் வைத்திருக்கும் சொத்துக்கள் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்படலாம் என்ற உணர்வு அதிகரித்துள்ளது. அதனால், “தங்கம் நம் கையில் இருந்தால்தான் அது உண்மையிலேயே நம்மது” என்ற அணுகுமுறையை பல நாடுகள் எடுத்துள்ளன. இந்தியாவும் இதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.
33
இந்தியா தங்கத்தை பாதுகாப்பாக மாற்றுகிறது
வெளிநாட்டு நாணய கையிருப்பு சற்று குறைந்திருந்தாலும், அதில் தங்கத்தின் பங்கு 13.9% இலிருந்து 16.7% ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு “ஸ்ட்ராடஜிக் இன்சூரன்ஸ்” போன்று செயல்படுகிறது. அவசர காலங்களில் உடனடி லிக்விடிட்டி கிடைக்க, தங்கம் நாட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்பதையே இது வலியுறுத்துகிறது. இந்த போக்கு இந்தியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் பரவியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளும் தங்க சேமிப்பை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன. உலகளாவிய நிதி அமைப்புகள் இந்த நேரத்தில் மாறிக்கொண்டிருக்கும், தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது நாடுகளின் முக்கிய முன்னுரிமையாக மாறியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.