உள்ளூர் சந்தைகளிலும் தெருவோரக் கடைகளிலும் ரூ.500-க்குள் எளிதாகக் கிடைக்கும் ஒரு கைப்பைக்கு, சர்வதேச பிராண்ட் ஒன்று ரூ.8.3 லட்சம் விலை நிர்ணயித்துள்ளது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ரூ.500 இந்திய கைப்பைக்கு ரூ.8.3 லட்சம் நிர்ணயித்த இத்தாலிய பிராண்ட்
உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் பிராண்டுகள் இந்திய கலாச்சாரக் கலைப் பொருட்களைப் பயன்படுத்தி லாபம் பார்ப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், பிரபல இத்தாலிய ஆடம்பர பிராண்டான 'ஃபெண்டி' (Fendi) வெளியிட்டுள்ள புதிய ஹேண்ட்பேக் கடுமையான சர்ச்சையில் சிக்கியுள்ளது.
24
Fendi Navratri bag
'Baguette 26424: Multicolour Re-Edition bag with embroidery and mirrors' என்ற பெயரில் இந்தப் பையை ஃபெண்டி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வண்ணமயமான நூல்கள், 39,500 மணிகள் மற்றும் 475 சிறிய கண்ணாடிகள் பதிக்கப்பட்டு முழுமையாகக் கைவேலைப்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பையை உருவாக்க 138 மணி நேரத்திற்கும் மேலாகும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக சுமார் 10,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.8.3 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பையின் அசல் தோற்றம் குஜராத் மற்றும் ராஜஸ்தான் வீதிகளில் நவராத்திரி திருவிழாக்களின் போது பெண்கள் விரும்பிப் பயன்படுத்தும் பாரம்பரியக் கண்ணாடி வேலைப்பாடு துணிப்பைகளை அச்சு அசலாக அப்படியே ஒத்துள்ளது.
34
கொதித்தெழுந்த தொழில்துறை பிரபலங்கள்
ஹர்ஷ் கோயங்கா சாடல்: ஆர்.பி.ஜி. என்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தனது X பக்கத்தில், பிராடாவின் (Prada) கோலாபுரி செருப்பு சர்ச்சைக்குப் பிறகு, இதோ ஃபெண்டியின் 'நவராத்திரி' பை வந்துவிட்டது. குஜராத் வீதிகளில் 500 ரூபாய்க்கு கிடைக்கும் வடிவமைப்பிற்கு 8.3 லட்சத்தை வசூலிக்கிறார்கள்; ஆனால், அசல் இந்திய கைவினைஞர்களுக்கு எந்தவித பாராட்டும் அல்லது கிரெடிட்டும் தரப்படவில்லை. சர்வதேச ஆடம்பர பிராண்டுகள் எப்போது நமது கைவினை கலைகளைச் சுரண்டுவதை நிறுத்தும்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிரண் மஜும்தார்-ஷா கண்டனம்: பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா, இது அப்பட்டமான கலாச்சார அபகரிப்பு; நமது பாரம்பரிய கலையைப் பாதுகாத்த கைவினைஞர்களைப் புறக்கணித்துவிட்டு, அதைச் சொகுசுப் பொருளாக மாற்றி விற்பது நமது திறமையையும் பாரம்பரியத்தையும் இழிவுபடுத்துவதாகும் எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவ, நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஃபெண்டி லோகோ மட்டும் இல்லையென்றால் இந்த பைக்கு யாரும் 500 ரூபாய்க்கு மேல் கொடுக்க மாட்டார்கள் எனப் பலரும் கேலி செய்து வருகின்றனர். மேலும், சீனா போன்ற நாடுகள் செய்வது போல இதுபோன்ற வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இந்தியா சட்டப்பூர்வக் கடிவாளம் போட வேண்டும்; அவற்றின் விற்பனையைத் தடுத்து உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
இதில் உச்சக்கட்ட வேடிக்கை என்னவென்றால், இந்தப் பை இத்தாலியில் தயாரிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டாலும், உண்மையில் இது மும்பையில் உள்ள 'சாணக்கியா' என்ற புகழ்பெற்ற இந்தியக் கைவினை மற்றும் எம்பிராய்டரி பட்டறையில்தான் கைவேலையாகத் தைக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக பிராதா, ஃபெண்டி போன்ற முன்னணி ஐரோப்பிய நிறுவனங்களுக்கு கைவேலைப்பாடுகளைச் செய்து கொடுப்பது இந்த சாணக்கியா நிறுவனம்தான்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.