Polymer Notes: இந்தியாவில் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகளை அறிமுகம் செய்ய ஆர்பிஐ-யின் நோட்டு அச்சடிக்கும் நிறுவனம், உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பான பாலிமர் தாள்களை வழங்குவதற்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இந்தியாவில் பிளாஸ்டிக் கரன்சி தொடர்பான ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. இதற்காக, ஆர்பிஐ-யின் நோட்டு அச்சடிக்கும் பிரிவான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL), உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இந்த நிறுவனங்கள், நவீன பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கனவே சேர்க்கப்பட்ட பாலிமர் தாள்களைத் தயாரிக்க வேண்டும். எதிர்காலத்தில், இந்தத் தாள்களைப் பயன்படுத்தி இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படலாம். இந்தத் திட்டம் உண்மையானால், இந்தியா முதல் முறையாக காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்தும்.
இதற்கு முன்னதாக, 2014-15 ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் 5 நகரங்களில் (கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர்) 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளைச் சோதனை முறையில் (Pilot Project) அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவே இந்த உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இருப்பினும், எந்த மதிப்புள்ள நோட்டுகள் பிளாஸ்டிக்கில் அச்சிடப்படும், எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை ரிசர்வ் வங்கி இன்னும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. இந்த டெண்டருக்கு ஆர்பிஐ கடுமையான தேசிய பாதுகாப்பு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் இந்திய அரசிடமிருந்து பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும்.
மூன்றாம் நாடுகளுக்கு விற்க முடியாது
இந்தியாவுக்காகத் தயாரிக்கப்படும் நோட்டுகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சீனா அல்லது பாகிஸ்தானில் இருந்து வரவில்லை என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த சிறப்பு மூலப்பொருளை வேறு எந்த மூன்றாம் நாட்டுக்கும் விற்கக் கூடாது.
நீடித்த உழைப்பு: காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் (பாலிமர்) நோட்டுகள் 2 முதல் 3 மடங்கு அதிக காலம் கிழியாமல், பாழாகாமல் உழைக்கக்கூடியவை.
சுத்தம் மற்றும் சுகாதாரம்: இந்த நோட்டுகளில் அழுக்கு, எண்ணெய் அல்லது தண்ணீர் ஒட்டாது. இதனால் கிருமிகள் பரவும் அபாயமும் குறையும்.
கள்ளநோட்டுத் தடுப்பு: பாலிமர் நோட்டுகளில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க முடியும் என்பதால், கள்ளநோட்டுகளைத் தயாரிப்பது மிக மிகக் கடினம்.
மறுசுழற்சி: இந்த நோட்டுகள் சேதமடைந்த பிறகு, இவற்றை முழுமையாக மறுசுழற்சி செய்து வேறு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
55
தேசிய பாதுகாப்பு தொடர்பான நிபந்தனைகள்
மேலும், ஒரு நாட்டின் மத்திய வங்கிக்கோ அல்லது நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கோ கடந்த மூன்று ஆண்டுகளாக பாலிமர் நோட்டுப் பொருட்களை வழங்கிய அனுபவம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். நாட்டின் மிக முக்கியமான நிதி நிலைமை சார்ந்த பிரச்சனை என்பதால் இந்த டெண்டரில் பாதுகாப்பிற்கு ஆர்பிஐ அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.