
லோன் EMI கட்டத் தவறிய வாடிக்கையாளர்களை கடன் மீட்பு ஏஜென்ட்கள் (Recovery Agents) மிரட்டுவதற்கும், மன உளைச்சலுக்கு ஆளாக்குவதற்கும் முடிவு கட்ட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. கடன் வசூல் செயல்முறைக்காக புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் இதில் அடங்கியுள்ளன. வாடிக்கையாளர்களுடன் பேசுவது, ரிகவரி ஏஜென்ட்களின் நடத்தை, வீடு அல்லது அலுவலகத்திற்கு வருவது மற்றும் டெக்னாலஜி மூலம் கடன் வசூலிப்பது என பல விஷயங்களுக்கு தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். கடனில் வாங்கிய ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் லேப்டாப்களை, பணம் கட்டாதபோது ரிமோட் மூலம் லாக் செய்யும் நடைமுறையையும் ஆர்பிஐ முதல் முறையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
புதிய விதிகளின்படி, கடன் கொடுத்த நிறுவனங்களும், ரிகவரி ஏஜென்ட்களும் வாடிக்கையாளர்களை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். இந்த நேரத்தைத் தாண்டி பேச வேண்டுமென்றால், வாடிக்கையாளரே அனுமதி கொடுத்தால் மட்டுமே முடியும். இதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர் வீட்டில் துக்க நிகழ்வு, அவசர மருத்துவச் சூழல் அல்லது திருமணம் போன்ற விசேஷங்கள் நடக்கும்போது ரிகவரி ஏஜென்ட்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் ஆர்பிஐ திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ரிகவரி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
கடன் வசூலின்போது மிரட்டுவது, தரக்குறைவான அல்லது பயமுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்றவற்றை புதிய விதிகள் முற்றிலுமாகத் தடை செய்துள்ளன. பெயர் சொல்லாமல் போன் செய்வது, மிரட்டல் விடுப்பது, திரும்பத் திரும்ப போன் செய்து தொல்லை கொடுப்பது, பொதுவெளியில் அவமானப்படுத்துவது அல்லது வாடிக்கையாளரின் குடும்பத்தினர், சொத்து மற்றும் மரியாதைக்குக் களங்கம் விளைவிப்பதாக மிரட்டுவது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களை கடன் வசூலுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதையும் ஆர்பிஐ தடை செய்துள்ளது. வாடிக்கையாளர்களைப் பொதுவெளியில் அசிங்கப்படுத்தும் நோக்கில் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஆடியோ பதிவுகளை ஆன்லைனில் பகிரக் கூடாது.
நேரில் வந்து சந்திப்பதற்கும் ஆர்பிஐ புதிய பாதுகாப்பு விதிகளைக் கொண்டுவந்துள்ளது. ரிகவரி ஏஜென்சி, வாடிக்கையாளரின் வீடு அல்லது அலுவலகத்திற்கு முதல்முறை வருவதற்கு குறைந்தபட்சம் 1 நாள் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், அந்த வழக்கை கையாளும் ரிகவரி ஏஜென்சியின் விவரங்களை வங்கிகள் வாடிக்கையாளரிடம் பகிர்ந்துகொள்வது கட்டாயம்.
பொதுவாக, வாடிக்கையாளர் குறிப்பிடும் இடத்தில்தான் அவரைச் சந்திக்க வேண்டும். ஒருவேளை வாடிக்கையாளர் இடம் எதுவும் சொல்லவில்லை என்றாலோ அல்லது சொன்ன இடத்திற்கு வரத் தவறினாலோ மட்டுமே, ஏஜென்ட்கள் அவரது வீடு அல்லது பணியிடத்திற்குச் செல்லலாம்.
ரிகவரி ஏஜென்ட்கள் தங்களது அதிகாரப்பூர்வ அடையாள அட்டை (ID Card), அங்கீகாரக் கடிதம் (Authorisation Letter) மற்றும் நோட்டீஸ் நகலை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த அங்கீகாரக் கடிதத்தில், ரிகவரி ஏஜென்சி மற்றும் வங்கியின் குறைதீர்ப்பு அதிகாரியின் (Grievance Officer) தொடர்பு எண்கள் இருப்பது அவசியம்.
பேச்சுவார்த்தைகளை ரெக்கார்டு செய்வது வங்கிக்கு கட்டாயம்
கடன் வசூல் தொடர்பான அனைத்து உரையாடல்களையும் பதிவு செய்து, வசூல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடன் வசூலுக்காக செய்யப்படும் அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் வங்கிகள் ரெக்கார்டு செய்ய வேண்டும். மேலும், அழைக்கப்பட்ட நேரம் மற்றும் போன் நம்பர் விவரங்களை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குப் பாதுகாக்க வேண்டும்.
கடன் வசூல் பணியை வெளி நிறுவனங்களுக்கு (Outsourcing) கொடுத்திருந்தாலும், ரிகவரி ஏஜென்ட்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் கடன் கொடுத்த நிறுவனங்களே நேரடிப் பொறுப்பு என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏஜென்ட்களின் நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன்/இன்சென்டிவ் சம்பள முறை, ஆக்ரோஷமான வசூல் நடவடிக்கைகளுக்குத் தூண்டுதலாக இருக்கக்கூடாது என்பதையும் வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்கு இந்த புதிய வழிகாட்டுதல்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கிப் பணத்தை வசூலிக்கத் தேவையான தகவல்களை மட்டுமே ரிகவரி ஏஜென்ட்களிடம் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளரின் டேட்டா தவறாகப் பயன்படுத்தப்படாமல் தடுக்க, வங்கிகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
போனை லாக் செய்வதற்கும் RBI புதிய ரூல்ஸ்
கடன் பணத்தில் வாங்கிய ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் லேப்டாப்களை ரிமோட் மூலம் லாக் செய்வதையும் ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட டிவைஸ் வாங்குவதற்காக மட்டுமே கடன் பெற்றிருந்தால், அந்த டிவைஸில் மட்டும் இந்த ரிமோட் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தலாம்.
பொதுவான பர்சனல் லோன்களுக்காக, வாடிக்கையாளர் ஏற்கனவே பயன்படுத்தும் டிவைஸ்களை லாக் செய்ய முடியாது. EMI பாக்கி நின்ற உடனேயே டிவைஸ் சேவையை முடக்கக் கூடாது. கடன் பாக்கி 30 நாட்களுக்கு மேல் ஆனால் மட்டுமே, சேவைகளை படிப்படியாகக் குறைக்க முடியும். 60 நாட்கள் பாக்கி நின்றால் மட்டுமே டிவைஸை முழுமையாக லாக் செய்ய முடியும்.
ஆனால், முழுமையாக லாக் செய்த பிறகும், அத்தியாவசிய சேவைகளை நிறுத்த முடியாது. இன்கமிங் கால்கள், SMS, அவசர அழைப்புகள் மற்றும் வேலைக்குத் தேவையான அம்சங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும். மேலும், வாடிக்கையாளரின் போனில் உள்ள கான்டாக்ட்ஸ், போட்டோ, வீடியோ, கால் லாக்குகள், மெசேஜ்கள் அல்லது லொகேஷன் ஹிஸ்டரி போன்ற எந்தவொரு தனிப்பட்ட டேட்டாவையும் அணுகுவதை ஆர்பிஐ முற்றிலுமாகத் தடை செய்துள்ளது.
பணம் கட்டியதும் போனை ஆன் செய்யணும்
வாடிக்கையாளர் பாக்கிப் பணத்தைச் செலுத்திய உடனேயே, அவரது டிவைஸ் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பணம் செலுத்திய 1 மணி நேரத்திற்குள் டிவைஸ் மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். ஒருவேளை, குறிப்பிட்ட நேரத்திற்குள் டிவைஸ் சேவையை மீண்டும் தொடங்க வங்கி தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வாடிக்கையாளருக்கு ₹250 இழப்பீடு வழங்க வேண்டும் (இது கடன் பாக்கித் தொகைக்கு உட்பட்டது). இந்த ரிமோட் லாக்கிங் வசதி பற்றி, நீண்ட கடன் ஒப்பந்தத்தின் நடுவே மறைத்து வைக்காமல், கடன் வழங்கும்போதே வாடிக்கையாளரிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ கட்டாயமாக்கியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.